சென்னைவாசிகள் கவனத்திற்கு!! கனமழையால் இந்த சாலைகள், சுரங்கப்பாதைகள் எல்லாம் மூடல்.. விரிவான தகவல்
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகரில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், சில முக்கிய போக்குவரத்து மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னையில் கடந்த 2 நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னைக்கு ரெட் அலர்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் பல்வேறு இடங்களிலும் மழைநீரும் தேங்கியுள்ளது.

கொட்டித்தீர்க்கும் கனமழை
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிக மழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நகரின் பல முக்கிய பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. ஒருபுறம் மோட்டரை கொண்டு மழை நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், மறுபுறம் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை நீரை வெளியேற்றும் பணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றங்கள்
மழை நீர் தேங்கியுள்ளதால் நகரில் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் மழை தொடரும் என்பதால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கனமழையால் சென்னையில் சில முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்
இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள்வியாசர்பாடி சுரங்கப்பாதை,மேட்லி சுரங்கப்பாதை,காக்கன் சுரங்கப்பாதை (மூலக்கொத்தளம் - கொருக்குப்பேட்டை) மூடப்பட்டுள்ளன.
Recommended Video

சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்
அதேபோல மழைநீர் பெருக்கு காரணமாக நகரில் சில முக்கிய போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பூர் பேரக்ஸ் ரோடு X ஸ்டரகான்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் (ஆர்த்தி அப்பார்ட்மெண்ட்ஸ்) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் ஸ்டரகான்ஸ் ரோடு மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாகத் திருப்பி விடப்படுகின்றன.
நசரத்பேட்டை நீதிமன்றம் அருகில் நீர் தேங்கி உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யவில்லை.
K-5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 70 அடி சாலையில் நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிமலஸ் சாலை - புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் நீர் உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை.

சாலையில் பள்ளம்
திருமுலைப்பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணி மஹால் - பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமுலைப்பிள்ளை ரோட்டில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

உதவி எண்கள்
வரும் நாட்களிலும் கனமழை பெய்யும் என்பதால் சென்னைவாசிகள் முக்கியமான சான்றிதழ்களை, ஆவணங்களை பிளாஸ்டிக் பையில் போட்டு பரண் போன்ற உயரமான இடங்களில் தனியாக வைப்பது மூலம் அவை தண்ணீர் நனைவதில் இருந்து பாதுகாக்கலாம். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications