புரட்டும் கனமழை.. திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு லீவ்
சென்னை: தீவிர மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது.
நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் காலையில் இருந்தே கனமழை பெய்தது.

எங்கு பெய்தது
அதேபோல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் இருந்து இன்று அதிகாலை வரை விடாமல் மழை பெய்து வந்தது. அதேபோல் அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

தீவிர மழை
இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்தே தீவிர கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகிறது. இன்றும் அங்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை
திருவாரூரில் தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதன் காரணமாக திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் திருவாரூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறையிலும் விடாமல் மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

என்ன காரணமாக
நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுப்பெற்று உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இது வரும் 22ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் 23ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது 24ம் தேதி புயலாக உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications