"முதல்வருக்கு தாயுள்ளம்.. இடப்பங்கீட்டில் நல்லது நடக்கும் என நம்புகிறோம்.." துரை வைகோ பளீச் பேச்சு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக -மதிமுக இடப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்பாகத் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்,
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பல முனை போட்டி
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக, பாமக, பாஜக, அமமுக, தேமுதிக, மநீம மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குகின்றன. திமுக தரப்பைப் பொறுத்தவரைக் கடந்த 2019 மக்களவை தேர்தல் சமயத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணியே சட்டசபைத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்தது. இப்போதும் கூட அதே கூட்டணி தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக திட்டம்
இருப்பினும், இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தது 80%, அதாவது 10 ஆயிரம் இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இடப்பங்கீட்டைப் பொறுத்தவரை மாவட்ட அளவிலேயே தேர்தல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக மா.செக்களுடன் மற்ற கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

குறைந்த வார்டுகள்
இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக குறைந்த அளவிலேயே இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகச் சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகளும், சிபிஎம் சிபிஐ, விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 வார்டுகளையும் மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கூட்டணிக் கட்சிகள் சற்று அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அதிக இடங்களைக் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

துரை வைகோ
இதனிடையே மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, "இடப்பங்கீடு பேச்சுவார்தைத சுமுகமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட வாரியாகவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. பெண்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்த சிலருக்கு இடங்களைக் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.

பிரசாரம்
இப்போது அரசியல் களத்தில் நிலவும் அசாதாரண சூழலில் மதவாத சக்திகள் வேரூன்றக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். இதன் அடிப்படையில் நாங்கள் எப்போதும் திமுக உடன் கைகோர்த்து நிற்கிறோம். மதிமுகவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தான் அனைத்து முடிவெடுக்கின்றனர். அதில் எனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. வைகோ நலமுடன் இருக்கிறார். இருப்பினும், கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் வைகோவோ பிரசாரத்திற்குச் செல்ல வாய்ப்பில்லை.

தாய் உள்ளம்
திமுகவிடம் பெரியண்ணன் மனப்பான்மை இல்லை. முதல்வர் தாய் உள்ளத்தோடு இடங்களை ஒதுக்கீடு செய்தார். சில இடங்களில் மாவட்ட பொறுப்பாளர்களால் பேச்சுவார்த்தையில் சிக்கல் இருக்கலாம். இருப்பினும், நம்பிக்கையுடன் இருக்கிறோம். திமுக நல்லதொரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் எனத் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை நிறைவேற்ற வேண்டியது எனது கடமை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications