வாழ்ந்தால் 4 பேருக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழணும்! மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்!-துரை வைகோ
சென்னை: வாழும் காலத்தில் நமது வாழ்க்கை 4 பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் இருக்கும் போதே முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
துரை வைகோவின் இந்த தத்துவ போதனைக்கு பின்னால் ஒரு துயர நிகழ்வும் அமைந்துள்ளது. அது தொடர்பாக அவர் எழுதியுள்ள பதிவு வருமாறு;

''தொடர் சுற்றுப்பயணம் மற்றும் வேலைப்பளு காரணமாக ஏற்பட்ட உடல் சோர்வை போக்கிக் கொள்ளும் பொருட்டு இரண்டு நாட்கள், நான் வழக்கமாக ஓய்வு எடுக்கும் ஒரு இடத்திற்கு சென்று தங்கியிருந்தேன். நான் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு சிறிய கடை இருக்கிறது.
கடந்த மூன்று வருடங்களாக அந்த சிறிய பெட்டிக் கடைக்கு சென்று தான் நாளிதழ்களை வாங்கி வருவேன். அது என் வழக்கம். நான் யார் என்று அந்த கடை நடத்துபவருக்கு தெரியாது.
நான் செல்லும் வாகனத்தை கவனித்த அவர், வண்டியின் பதிவு எண்ணை பார்த்து ஒரு நாள் உங்கள் சொந்த ஊர் தேனியா என கேட்டார். என் மனைவி ஊர் தேனி மாவட்டத்தில் தான் இருக்கிறது என்றேன். அவருடைய ஊரும் அதன் அருகில் என்பதால் மகிழ்ச்சி அடைந்தார்.
தினசரி நாளிதழ்களை வாங்கிக் கொண்டு நான் கிளம்பும்போது மிச்ச சில்லறை இந்தாங்க சார் என்று கொடுப்பார். பரவாயில்லைங்க.. வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொன்னாலும் பேப்பருக்கு உரிய பணம் கிடைத்தால் போதுமானது என்று மிச்ச தொகையை கொடுத்து விடுவார்.

இந்த அணுகுமுறையில் அவருடைய பண்பு வெளிப்பட்டது. உழைப்பை மட்டுமே நம்பி வாழும் எளிய மனிதர். தினமும் கஷ்டப்பட்டு உழைத்து வாழும் சாதாரண எளிய மக்களிடம் இருக்கும் நேர்மையை கண்டு வியப்படைந்தேன்.
சமீபத்தில், நான் ஓய்வில் இருந்த போது வழக்கம்போல் அந்தக் கடைக்கு நாளிதழ்கள் வாங்கச் சென்றேன். அப்போது அவர் அங்கே இல்லை. அவருடைய மனைவி தான் இருந்தார். அவர் எங்கே? என விசாரித்தபோது தான், அவர் இறந்து போன தகவல் தெரிந்தது.
கேட்டவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என்ன ஆயிற்று என அவர் மனைவியிடம் விசாரித்தேன். அப்போது தான் அவர் பெயர் கதிரவன். வயது 52 என்றத் தகவலை அறிய முடிந்தது. அவருடைய மனைவி பெயர் ஜாஸ்மின். கதிரவன் முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர். அவருடைய மனைவி இஸ்லாம் மதத்தை சார்ந்தவர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆதலால், உறவினர்களின் ஆதரவு அவ்வளவாக இல்லை. இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.
சமீப காலமாக, கதிரவன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தேனி மாவட்டத்தில் அவருடைய சொந்த ஊரில் அவருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் இடையில் சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. அது தொடர்பாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் இறந்துள்ளார்.

அருகில் இருந்த அவருடைய மகள் அப்பா தான் எங்களுக்கு எல்லாமே என்றார். கவலைப்படாதீங்கம்மா.. என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு செய்கிறேன். என்னுடைய அலைபேசி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வழக்கறிஞரிடம் சொல்லி என்னை தொடர்புக்கொள்ள சொல்லுங்கள். யாரும் உங்களை அங்கே மிரட்டிவிட முடியாது. வழக்குக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். எங்கள் மாவட்டச் செயலாளரிடமும் சொல்லி விசாரிக்க சொல்கிறேன். கவலைப்படாதீர்கள் என ஆறுதல் சொன்னேன்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இந்த சிறிய இடைவெளி தான் நம் வாழ்க்கை. அதை நாலு பேருக்கு பயனுள்ள வகையில் வாழ வேண்டும். மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
ஆனால், பல பேர் மற்றவர்களை திருப்திபடுத்த வேண்டுமே என செயற்கையான வாழ்க்கையை வாழ்கிறார்கள். போட்டி, பொறாமைகள், வெறுப்புகளால் ஒருவரை ஒருவர் வீழ்த்திவிட முனைகிறார்கள். அந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கை இல்லை.
யார் எப்போது இறப்போம் என்பது யாருக்கும் தெரியாது. நமக்கு மேலே ஒருவன் இருக்கிறான். நாம் நூறு வயது வரை வாழ்வோமா, எழுபது வயதுவரை வாழ்வோமா, ஐம்பது வயதிலேயே விடைபெற்றுக் கொள்வோமா என்பதெல்லாம் நமக்கு தெரியாது. இருக்கின்ற வரை மற்றவர்களின் மீது அன்பு செலுத்துவோம். முடிந்தவரை உதவியாக இருப்போம்.''












Click it and Unblock the Notifications