திமுகவில் 2 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்! என்ன பின்னணி? துரைமுருகன் விடுத்த மேஜர் அறிவிப்பு!
சென்னை: தலைக்கு மேல் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் காத்திருக்கும் நிலையில், திமுகவில் அதிரடியாக 2 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் திமுகவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக இது போன்ற மாற்றங்கள், அதிரடி ஆக்ஷன்கள் எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு முடிவுகளின் அடிப்படையில் நிகழக்கூடும். ஆனால் இப்போது என்னவென்றால் வீக்கான இரண்டு மாவட்டச் செயலாளர்களை பொறுப்பிலிருந்து விடுவித்து ஓய்வு கொடுத்திருக்கிறது திமுக தலைமை.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் த.இளைய அருணா அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு..ஆர்.டி.சேகர், எம்.எல்.ஏ.,(82/பி முதல் பிரதான சாலை, திருவள்ளூவர் நகர், கொடுங்கையூர், சென்னை-118) அவர்கள் சென்னை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் குன்னம் இராஜேந்திரன் அவர்கள், தனது உடல்நலக்குறைவு காரணமாக, தான் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதால், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற திரு. வீ. ஜெகதீசன் (நெய்குப்பை மெயின் ரோடு, வேப்பந்தட்டை & அஞ்சல், பெரம்பலூர் மாவட்டம்) அவர்கள் பெரம்பலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.''
பெரம்பலூரில் அமைச்சர் நேரு மகனும், வடசென்னையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமியும் களம் காணக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தேர்தலுக்கு முன்பே இப்படியென்றால், தேர்தலுக்கு பிறகு இன்னும் பல அதிரடி ஆக்ஷன்கள் திமுகவில் அரங்கேறலாம் எனத் தெரிகிறது.
பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரனை பொறுத்தவரை ஏற்கனவே உடல் நலக் குறைவோடு தான் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரை மாற்றியதில் கூட பெரிதாக எந்த உள் காரணமும் இல்லை. ஆனால் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த இளைய அருணாவிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டிருப்பது தான் இதில் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications