கைதுக்கு அஞ்சி பரப்புரை பயணம் நிற்காது... உதயநிதி பயணத்தை தொடர்வார்... துரைமுருகன் உறுதி..!
சென்னை: கைதுக்கு அஞ்சி திமுகவின் பரப்புரை பயணம் நிற்காது எனக் கூறியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கையை கண்டித்துள்ள அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
மேலும், அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

துரைமுருகன் சாடல்
இன்று முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடக்க இருந்த முதற்கட்ட பயணத்தை தொடங்கிய இடத்திலேயே மறித்த அதிமுக அரசின் அராஜக போக்குக்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நித்தமும் ஒரு மாவட்டத்துக்குப் போய்,அரசு நிகழ்ச்சி,ஆய்வு என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சித்து தனது அரசியல் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஆளுக்கொரு நியாயம்
பேட்டிகள் கொடுப்பது, கலந்தாலோசனைகள் செய்வது என்பதை அவரோ அமைச்சர்களோ அவர்களது கட்சியோ நிறுத்தவில்லை. ஆனால் திமுக நடத்தும் கூட்டங்களாக இருந்தால் அதற்கு அனுமதி மறுப்பதை வழக்கமாக வைத்துள்ளது அரசு. ஆளுநர் மாளிகை நோக்கிய மகளிர் பேரணியைத் தடுத்து, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோரைக் கைது செய்தது இந்த அரசு. ஆனால் அமைச்சர்களுக்கோ, ஆளும்கட்சிக்கோ எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

பயணம் நிற்காது
இதை வைத்துப் பார்க்கும் போது, திமுகவின் தேர்தல் பணிகளைத் தடுக்கும் நோக்கத்துடன் தான் கொரோனா கட்டுப்பாட்டுகள் என்ற திரைமறைவுக் கட்டுப்பாடுகளை எடப்பாடி பழனிச்சாமி தொடர்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது.இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி கைது செய்யப்பட்டாலும், இந்த பரப்புரை பயணம் நிற்காது.

துரைமுருகன் உறுதி
அவர் தனது பயணத்தை தொடர்வார். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாட்டை தடுத்துவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுமானால் அது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே மக்கள் மன்றத்தில் தனிமைப்படுத்தப்பட்டு விடும் என எச்சரிக்கிறேன்.












Click it and Unblock the Notifications