திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்... பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி
சென்னை: திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரைமுருகன் அளித்த கடிதத்தை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
இதனால் மார்ச் 29-ம் தேதி அன்று நடைபெறும் திமுக பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதிய பொதுச்செயலாளராக துரைமுருகனும், புதிய பொருளாளராக எ.வ.வேலு அல்லது டி.ஆர்.பாலு ஆகியோர்களில் யாரேனும் ஒருவர் தேர்வாக மிக அதிக வாய்ப்புகள் உள்ளன.

ராஜினாமா
திமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இப்போது வகித்து வரும் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் துரைமுருகன். இதற்கான விலகல் கடிதத்தை தாம் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். திமுக பொதுசெயலாளர் பதவியை மையமாக வைத்து பல்வேறு யூகங்களும், வதந்திகளும் வலம் வந்ததால் அதனை தடுக்கும் பொருட்டு ஸ்டாலின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மார்ச் 29-ம் தேதி
திமுக பொதுக்குழு வரும் மார்ச் 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க வேண்டும் என்றும், அன்றைய தினம் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பற்றி விவாதித்து தேர்வு செய்யப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் இன்று பொருளாளர் தேர்வும் நடைபெறும் என கூறியுள்ளார் ஸ்டாலின்.

சீனியர்கள்
தற்போதைய சூழலில் துரைமுருகன் மட்டுமே திமுக பொதுச்செயலாளருக்கான போட்டியில் உள்ளதாக தெரிகிறது. துரைமுருகன் பொதுச்செயலாளராக முன்னிறுத்தப்படுவதால் பொருளாளர் பதவிக்கு எ.வ.வேலு, அல்லது டி.ஆர்.பாலு ஆகியோரில் ஒருவர் போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக முகாமில் இப்போதே அதற்கான பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
திமுக பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் கடந்த வாரம் மறைந்ததை அடுத்து, அவரது இடத்திற்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை துரைமுருகன் நிரப்ப உள்ளார். ஸ்டாலினை தம்பி என்று அழைக்கும் துரைமுருகன், அவரது எண்ண ஓட்டங்களுக்கு தகுந்தவாறு செயல்படக் கூடியவர். கட்சியை பொறுத்தவரை சீனியர். இதற்கு முன்னர் திமுக முதன்மை செயலாளராக அவர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி மறைவுக்கு பிறகு பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதன்மை செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.












Click it and Unblock the Notifications