களத்துல நானே இறங்குறேன்..பிரச்சாரத்தில் பட்டையக் கிளப்பும் துர்கா ஸ்டாலின்! பரபரப்பான உடன்பிறப்புகள்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலினின் மனைவியும், உதயநிதி ஸ்டாலினின் தாயாருமான துர்கா ஸ்டாலின். சென்னையில் ஆன்மீக மற்றும் மீனவ கிராமங்களில் அவர் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம் கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு முக்கிய முகம் பிரசாரத்தில் இணைந்துள்ளது. அவர் வேறு யாருமல்ல திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவியும், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தாயாருமான துர்கா தான்.
இதற்கு முன்பு, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே துர்கா ஸ்டாலின் பிரசாரம் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த முறை கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்காகவும் நேரடியாக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.

2026 சட்டசபை தேர்தல்
அந்த வகையில், திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் ஆதரவாக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மப்பேடு உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்ததும் கவனிக்கத்தக்கது.
துர்கா ஸ்டாலின்
முன்னதாக, சீர்காழி தொகுதியிலும் துர்கா ஸ்டாலின் புயல் வேகத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பழையார், மடவாமேடு, திருமுல்லைவாசல் போன்ற மீனவ கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்ததுடன், அங்குள்ள ஆலயங்களிலும் சாமி தரிசனம் செய்தார். மீனவ பெண்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார். தேர்தல் முடிந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
மு.க. ஸ்டாலின்
இந்த நிலையில், திமுக முதல் குடும்பத்திலிருந்து ஏற்கனவே மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் முக்கிய பிரச்சார முகங்களாக களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது துர்கா ஸ்டாலின் நான்காவது முக்கியப் பிரச்சார முகமாக தேர்தல் நேரத்தில் களமிறங்கியிருப்பது கட்சித் தொண்டர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்
பெண்கள் வாக்காளர்கள் மத்தியில் தனிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முகமாக துர்கா ஸ்டாலின் பார்க்கப்படுகிறார். குறிப்பாக எளிமையான அணுகுமுறை மற்றும் நேரடி சந்திப்பு மூலம் அவர் நடத்தும் பிரசாரம், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூடுதல் வாக்குகளை ஈர்க்கக்கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதனால், இந்த தேர்தலில் திமுக முதல் குடும்பத்தின் அமைதி முகமாக கருதப்பட்ட துர்கா ஸ்டாலின், தற்போது வெளிப்படையான முக்கிய பிரச்சாரகராக உருவெடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வாக்காளர்கள்
கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை ஸ்டாலின் மற்றும் உதயநிதி போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் துர்கா ஸ்டாலின். அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், சில நேரங்களில் கட்சி தொடர்பான சில முக்கிய முடிவுகளை துர்கா ஸ்டாலின் எடுத்து வந்ததாக அவ்வப்போது பேசப்படுவது உண்டு. தற்போது நேரடியாக அவரே களத்தில் இறங்கி இருப்பது முக்கிய மாற்றம் தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.














Click it and Unblock the Notifications