சூப்பரா தொடங்கிய புத்தாண்டு.. கொண்டாட்டத்தின்போது எந்த அசம்பாவிதமும் இல்லை.. சென்னை காவல்துறை தகவல்!
சென்னை: 2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என சென்னை மாநகர காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னையில் 2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று சென்னை பெருநகரில் சிறப்பாக பணிகள் மேற்கொண்ட, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பாராட்டி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "2024ம் ஆண்டு புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) என மொத்தம் 18,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்,நேற்று (31.12.2023) இரவு, சென்னை பெருநகர காவல் அதிகாரிகளுடன் சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில், புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு, உழைப்பாளர் சிலை அருகே, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்களுடன் கேக் வெட்டி, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கேக் வழங்கி, அனைவருக்கும் 2024 புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும், நேற்று சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் அயராது மேற்கொண்ட சிறப்பான பணியால் 2024ம் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல், சென்னை பெருநகரில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று (31.12.2023) சென்னை பெருநகரில் சிறப்பாக பணிகள் மேற்கொண்ட, காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பாராட்டி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி இருந்தனர். உயிரிழப்பு இல்லா புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications