சாவி கிடைச்சாச்சு.. எஸ் பி வேலுமணியின் வங்கி லாக்கரை சோதனையிட திட்டம்?.. என்ன செய்வார் கந்தசாமி?
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வங்கி லாக்கரை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த போது 2014 முதல் 2018 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் திட்டபணிகளுக்காக ஒப்பந்தங்கள் போட்டதில் ரூ 811 கோடி முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்த புகாரை விசாரித்த அப்போதிருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் புகாரில் முகாந்திரம் ஏதும் இல்லை என கூறி விட்டனராம். இதையடுத்து திமுக எம்பி ஆர் எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தினர் ஆதாரங்களுடன் வழக்கு போட்டனர்.

லஞ்ச ஒழிப்பு துறை
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் லஞ்ச ஒழிப்பு துறை தலைவராக கந்தசாமி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அவரிடம் அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் முதல்வர் ஸ்டாலின் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.

எஸ் பி வேலுமணிக்கு எதிராக புகார்
இதையடுத்து எஸ் பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்து நேற்று காலை முதல் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள் அரசு ஒப்பந்தங்கள் மூலம் பல கோடி லாபம் பார்த்ததாகவும் இதற்கு வேலுமணி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் புகார்களில் உள்ளது.

வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள்
இதையடுத்து எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னை எம்எல்ஏ விடுதியில் வைத்து எஸ் பி வேலுமணியிடம் 10 மணி நேரத்திற்கு மேல் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 13 லட்சம் ரொக்கப் பணம், சில பண பரிவர்த்தனைகள், 2 கோடி வைப்பு தொகை, மாநகராட்சி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் ஹார்ட் டிஸ்க்களும் வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
Recommended Video

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக அறக்கட்டளை மூலமாக பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வங்கி லாக்கரில் அது தொர்பான ஆவணங்கள் உள்ளதா என வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

வேலுமணி தாக்கல் செய்த ஆவணங்கள்
கடந்த தேர்தல்களில் வேலுமணி தாக்கல் செய்த ஆவணங்களை கைப்பற்றிய போலீஸார் அதை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 17 பேருக்கும் தனித்தனியே சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடவும் லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த சோதனைகள் நடந்த நிலையில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை தலைவர் கந்தசாமி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications