தமிழகம் முழுக்க தாலுகா ஆபிசில் ரெய்டு.. புது ரூட்டில் பணத்தை குவித்த ஊழியர்கள்! சோதனையில் அம்பலம்
சென்னை: தமிழகம் முழுக்க நேற்று பல்வேறு தாலுகா அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இரவு 10 மணி வரை நடந்த இந்த சோதனையின் போது மொத்தம் 82.10 லட்சம் ரூபாய் சிக்கியுள்ளது. இதில் கூகுள் பே மூலமாக மட்டும் ரூ.68.32 லட்சம் சிக்கியுள்ளது. அதிகபட்சமாக கரூர் வட்டாட்சியர் அலுவலக்த்தில் 17.51 லட்சம் சிக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் இந்த அதிரடி சோதனையானது நடைபெற்றது. இடைத்தரர்கள் மூலமாக மாலையில் லஞ்ச பணம் கைமாறும் என்பதால் இதனை சரியாக டார்கெட் செய்து தாலுகா அலுவலங்களில் மாலை 5 மணிக்கு மேல் சோதனையானது தொடங்கியது.

கூகுள் பேவில் அதிகளவில் லஞ்சம்
சென்னை எழும்பூர், சோழிங்கநல்லூர், மாம்பலம், பெரம்பூர் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். திருவாரூர், வேதாரண்யம், ராமநாதபுரம், நெல்லை மாவட்டம் திசையன்விளை, கொடைக்கானல், நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட 41 இடங்கைளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை நேற்று இரவு 10 மணியளவில்தான் முடிவடைந்தது. இந்த சோதனையில் 35 தாலுகா அலுவலகங்களில் கணக்கில் வராத ரொக்க பணம் சிக்கியது. ரொக்கமாக ரூ.13.78 லட்சமும், கூகுள் பே வாயிலாக 68.32 லட்சமும் என மொத்தம் 82.10 லட்சம் ரூபாய் சிக்கியுள்ளது. ரொக்கமாக பணம் வாங்குவதை விட தற்போது கூகுள் பேவில் பணம் அதிக அளவில் லஞ்ச பணம் வாங்கப்பட்டது பொதுமக்களிடையே வியப்பையும் கொடுத்து இருக்கிறது.
கரூரில் அதிகபட்சம்
ரெய்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் வட்டாட்சியர் அலுவலக்த்தில் 17.51 லட்சம் சிக்கியுள்ளது. இதில் ஜிபே மூலாமக ரூ. 16.33 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளனர். திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் 12.40 லட்சம் சிக்கியது. இதில் ரொக்கம் 7 ஆயிரம் மட்டுமே கைப்பற்றப்பட்டது. ஏனைய பணம் கூகுள் பே மூலமாக மாற்றப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications