விடிகாலையில் கூட இல்லீங்க.. நள்ளிரவை கடந்தும்.. முதல்வர் ஸ்டாலின் குறித்து ரகசியம் சொன்ன எ.வ.வேலு
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியை போல முதல்வர் ஸ்டாலினும் செயல்படுகிறார். சூரியன் உதயமாவதற்கு முன்பே அமைச்சர்களை எழுப்பி விடுகிறார் என அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அதிகாலை 3 அல்லது 4 மணிக்கெல்லாம் எழுந்து அனைத்து செய்தித்தாள்களை படிப்பதை வழக்கமாக கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த செய்தித்தாள்களில் ஏதேனும் துறைகளில் குறைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தால் உடனே சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு போன் போட்டு கேட்பார்.
"என்ன இது, பேப்பரில் வந்திருக்கு, உடனே தீர்வு காணுங்கள்" என உத்தரவிடுவார். இந்த செய்தித்தாள்களில் வந்துள்ள துறை ரீதியிலான பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் அன்றைய தினம் சட்டசபையில் புயலை கிளப்ப திட்டமிட்டிருந்திருப்பர்.

சட்டசபை கூடும் முன்பே தீர்வு
வழக்கம் போல் சட்டசபை கூடும். அப்போது அதிமுகவிலிருந்து துறை சார்ந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்படும். அதற்கு அந்த துறை சார்ந்த அமைச்சர் பதில் அளிக்கும் போது அது சூரியன் உதிப்பதற்கு முன்பே சரி செய்தாகிவிட்டது என பதில் அளிப்பார்.

தண்ணீர் பிரச்சினை
இது போல் தண்ணீர், மின்சாரம், என பொது மக்கள் சார்ந்த எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த அதிகாரிக்கு கோபாலபுரத்திலிருந்து போன் பறக்கும். விடியற்காலையில் போன் செய்தால் யாரென்ற சந்தேகமே இல்லாமல் அது முதல்வர்தான் என அலறி அடித்துக் கொண்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் போனை எடுத்து பேசுவர்.

எதிர்க்கட்சிகள்
இதனால் சட்டசபையில் எதிர்க்கட்சிகளால் எந்த பிரச்சினையும் ஏற்படாதவாறு கருணாநிதி பார்த்துக் கொண்டார் என்றெல்லாம் சொல்வதுண்டு. அதே பாணியை முதல்வர் ஸ்டாலினும் கையாள்கிறார் என அமைச்சர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் தமிழகத்தில் மின்வெட்டு குறித்து இரவு முழுவதும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

சீராகவிட்டது
மேலும் பிரச்சினை சீராகிவிட்டது என்று சொன்னவுடன்தான் அவர் தூங்குவதற்கே சென்றார். அதற்குள் விடியற்காலையே வந்துவிட்டது. அந்தளவுக்கு மக்கள் பிரச்சினைக்காக முதல்வர் ஸ்டாலின் உழைக்கிறார் என பெருமிதமாக சொன்னார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் பொது மக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஒரு தகவலை தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
அவர் கூறுகையில் முதல்வர் எப்போது உறங்குகிறார், எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறார் என தெரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு நாள் நள்ளிரவை தாண்டி 2.30 மணிக்கு என்னை போனில் அழைத்து பொதுவாக சில விஷயங்களை பேசிவிட்டு மதுரையில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நூலகப் பணிகள் எந்தளவுக்கு உள்ளது என கேட்டார். மேலும் சில சந்தேகங்களை கேட்டுவிட்டு பின்னர் இணைப்பை துண்டித்தார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications