SIR கணக்கீட்டு படிவத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.. இன்று முதல் வாக்காளர் திருத்தப் பணிகள் தொடக்கம்
சென்னை: SIR (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்) பணிகள் தொடர்பான கணக்கீட்டுப் படிவத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம். நவம்பர் 4 (இன்று) முதல், டிசம்பர் 4 வரை வாக்காளர் திருத்த பணிக்கு, படிவங்கள் வழங்கி திருத்தப் பணிகள் தொடங்கப்படுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மற்றும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான, முன் திருத்த நடவடிக்கைகள் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை நடைபெற்றது.

இதில், கணக்கீட்டுப் படிவங்களை அச்சிடும் பணியும், வாக்காளர் பதிவு அலுவலர்கள் (EROs), உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் (AEROs), வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்கள் (BLO Supervisors) மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) ஆகியோருக்கு பயிற்சி அளிக்கும் பணிகளும் நடைபெறும் நடைபெற்றது. மேலும் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி கருத்துகள் கேட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வீடுதோறும் கணக்கீடு செய்யும் பணி இன்று (நவம்பர் 4) முதல் டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. இதில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று, தற்போதைய வாக்காளர்களுக்கு முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீண்டும் சேகரிப்பார்கள். அப்போது, அங்கு இல்லாதவர், இடம் மாறியவர், இறந்தவர், இரட்டைப் பதிவுகள் ஆகியவற்றை அடையாளம் காண்பதுடன், புதிய தகுதியுள்ள வாக்காளர்களின் விவரங்களையும் சேகரிப்பார்கள். எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை செல்லுவார்.
மேலும், தற்போதைய வாக்காளர்களுக்கு இணையதளம் வழியாக (Online) முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையும் ஆவணங்களையும் பதிவேற்றும் வசதியும் வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பூத் ஏஜென்ட்களுக்கு, இப்பணியில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், 12 பூத் ஏஜென்ட்களும் வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்ல உள்ளனர். இதன்படி மொத்தம் 77,000 அலுவலர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து டிசம்பர் 9 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆட்சேபனைகள் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நாள் முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகும்.
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி 2 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக இந்த பணி இன்று செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. தமிழகத்தில், இந்தப் பணியை மேற்கொள்வதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எஸ்.ஐ.ஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், "தமிழகத்தில் 2002 மற்றும் 2005- ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர் கணக்கெடுப்பு பணி நாளை முதல் தொடங்க உள்ளது. இந்த பட்டியல்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் உள்ளன. இந்த பட்டியல்களுடன் அனைத்து வீடுகளுக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லப்போவது இல்லை. எந்தெந்த வீடுகளில் 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதோ அந்த வீடுகளுக்கு மட்டுமே செல்வார்கள்.
அந்த வீடுகளில் யாராவது இருந்தால் அவர்களின் விவரத்தை கேட்டு வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவார்கள். அந்த வீட்டில் 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தை வழங்குவார்கள். அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து தரவேண்டியது அவசியம் இல்லை. அடுத்த முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வரும்போது ஆவணங்களுடன் அவற்றை சமர்பித்தால் போதும் இதற்காக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒரு வீட்டிற்கு 3 முறை வருவார்கள்.
கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். முகவரி மாற்றம் எதுவும் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது. முகவரி மாறியவர்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் அதற்கான ஆவணங்களை டிசம்பர் 7 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம்தேதிக்குள் சமர்ப்பித்து தங்களது பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்யலாம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications