“டாஸ்மாக் முறைகேடு.. விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமே இல்லை”.. ஐகோர்ட்டில் தமிழக அரசு ஒரே போடு!
சென்னை: "மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியாது. டாஸ்மாக் முறைகேடு புகாரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரமே இல்லை" என தமிழக அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை அண்மையில் வெளியிட்டது.

அதில், தமிழகத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்களிடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுவனங்களுக்கு டாஸ்மாக் ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கடந்த 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும், அதில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில், தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சௌத்ரி ஆஜரானார்.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், "நான் சொல்ல வருவது வெறும் டாஸ்மாக் விவகாரம் பற்றியது அல்ல. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநிலத்தின் பிராந்திய எல்லைக்குள் அமலாக்கத்துறையின் அதிகாரத்தை மீறுவதாக அறிவிக்க வேண்டும்.
அமலாக்கத்துறை இங்கு வந்து டாஸ்மாக் நிறுவன வளாகத்தை கையகப்படுத்த முடியுமா? மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியாது. டாஸ்மாக் முறைகேடு புகாரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரமே இல்லை" என வாதம் வைத்துள்ளார்.
மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என அனுமானத்தின் அடிப்படையில் கூறியுள்ளது அமலாக்கத்துறை என தமிழக அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததற்கு சந்தேகப்படுவதற்கான காரணம் இருக்க வேண்டும். சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை" என வாதம் வைத்தார்.












Click it and Unblock the Notifications