ஐயோ.. அம்மா! நெஞ்சை பிடித்து அழுத செந்தில் பாலாஜி - மருத்துவமனை ICUவில் அனுமதி - பெரும் பரபரப்பு
சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.

போக்குவரத்துத் துறை அமைச்சராக அதிமுக ஆட்சியின்போது இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளை வாங்கித் தர சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது 3 வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர்.
எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக இந்த வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. கடந்த மே மாதம் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது.
மத்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி வீட்டுக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, கரூரில் உள்ள அவரின் வீடு, அவரது சகோதரரின் சென்னை வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது.
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் செவ்வாய்கிழமை மதியம் 1.30 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. கரூரில் 6 இடங்களில் நடைபெற்ற சோதனை நேற்றே நிறைவடைந்தது. கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டிலும் 15 மணி நேரம் சோதனை முடிவடைந்தது.
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரம் கழித்து அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. இரவு 10.30 மணியளவில் செந்தில் பாலாஜி வீட்டுக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரி கையில் கடிதம் ஒன்றை கொண்டு சென்றார். இந்த நிலையில் சோதனை முடிந்த பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக செந்தில் பாலாஜியை காரில் அழைத்து சென்றனர்.
காலை நடைபயிற்சி சென்ற ஆடையிலேயே அவரை விசாரணைக்கு அழைத்து சென்று உள்ளார்கள். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முகத்தை கையால் மூடிக்கொண்டு மற்றொரு கையில் நெஞ்சை பிடித்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுத காட்சிகளும் வெளியாகின. ஓமந்தூரார் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே விசாரணை முடிந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கிளம்ப சொன்னதாகவும், நெஞ்சு வலிப்பதால் தன்னால் நகர முடியவில்லை என்று அவர் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே செந்தில் பாலாஜியை காரில் ஏற்றிக்கொண்டு அமலாக்கத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications