வாக்கிங் போன கேப்பில்.. ரெய்டிற்கு புகுந்த அதிகாரிகள்! டாக்ஸியை பிடித்து ஓடி வந்த செந்தில் பாலாஜி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், இது குறித்துக் கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது அதில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், இதில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்த தடையை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது.
ரெய்டு: அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மீண்டும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அவருக்குத் தொடர்புடையோர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி தலைநகர் சென்னையில் பசுமை வழிச்சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சோதனை குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரெய்டு நடத்த அதிகாரிகள் வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலேயே இல்லையாம்.
வாக்கிங்: அவர் இன்று காலை வழக்கம் போல நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது சரியாக அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டிற்கு வந்துள்ளனர். அமைச்சர் வீட்டில் இல்லாத நிலையில், அதிகாரிகள் ரெய்டிற்கு வந்துள்ளனர். நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது நண்பர்கள் தொடர்பு கொண்டே ரெய்டு குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் நடைப்பயிற்சியைப் பாதியில் முடித்துக் கொண்டு திரும்பியுள்ளார்.
ரெய்டு குறித்த தகவல் கிடைத்தவுடன் நடைப்பயிற்சியைப் பாதியில் முடித்துக் கொண்டு, டாக்ஸியை பிடித்து வீடு திரும்பியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சரின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமைச்சரின் ஆதரவாளர்கள், திமுக தொண்டர்கள் சிலர் ரெய்டு நடந்த இடங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ஐடி ரெய்டு: முன்னதாக கடந்த மே மாதம் இறுதியில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சில இடங்களில் ரெய்டு சுமார் ஒரு வாரம் வரை தொடர்ந்தது. அப்போது முதல் நாளில் கரூரில் அமைச்சரின் ஆதரவாளர்கள் அதிகப்படியாகக் குவிந்தனர். அவர்களில் சிலர் ரெய்டிற்கு வந்த அதிகாரிகளின் காரை உடைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அதிகாரிகள் தங்களால் சோதனை நடத்த முடியவில்லை என்று போலீஸ் நிலையத்திலேயே தஞ்சமடைந்த நிகழ்வுகள் எல்லாம் கூட நடந்தது. அந்த விவகாரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக தொண்டர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications