பழனி எம்.எல்.ஏ ஐபி செந்தில்குமார் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..சகோதரி வீட்டிலும் ரெய்டு..சோதனை ஏன்?
சென்னை: அமைச்சர் ஐ பெரியசாமி மகனும் பழனி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான ஐபி செந்தில் குமார் மற்றும் ஐ பெரியசாமி மகள் இந்திராணி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. சிஆர்பிஎப் அதிகாரிகள் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. காலையிலேயே நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனையால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருப்பவர் ஐ.பெரியசாமி. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள ஐ பெரியசாமிக்கு சொந்தமான வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிஆர்பிஎப் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக
பெரியசாமி கடந்த 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஐ. பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில் குமார், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்த்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விடுவித்தது செல்லாது என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.
மகன், மகள் வீடுகளிலும் சோதனை
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ பெரியசாமி மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு ஆகஸ்ட் 18 அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
இத்தகைய சூழலில்தான் அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஐ பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான ஐபி செந்தில் குமார் மற்றும் வள்ளலார் நகரில் உள்ள ஐ பெரியசாமி மகள் இந்திரானி இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

செந்தில் பாலாஜி, பொன்முடி, கே என் நேரு
உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ரெய்டு குறித்த தகவல் கிடைத்ததும், திமுகவினர் மற்றும் ஐபெரியசாமி அதரவாளர்கள் வீட்டின் முன்பாக குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி மற்றும் அமைச்சர் கே.என் நேரு, துரைமுருகன் ஆகியோரது வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று இருக்க கூடிய நிலையில், தற்போது ஐ பெரியசாமி மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் இந்த சோதனையானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டாலும் தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் இந்த ரெய்டு தொடர்பாக வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications