”ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்கமுடியாது.. பச்சோந்தியை விட அதிக கலர் மாறுவார்” நின்று ஆடும் இபிஎஸ்!
சென்னை: பச்சோந்தியை விட அதிக கலர் மாறுவார் ஓ.பன்னீர் செல்வம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, அதிமுக அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் காவல்துறையினர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, பின்னர் அது நீதிமன்ற உத்தரவின் பேரில் நீக்கப்பட்டது. இந்த விவாகரத்திற்கு பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு ஈபிஎஸ் செல்லவில்லை.
அதிமுகவுடன் டச்சில் 10 திமுக எம்எல்ஏக்கள்.. எடப்பாடி சொன்னதை நம்பி பரபரப்பு கிளப்பிய தேசிய ஊடகங்கள்!
இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்
கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற அறிவித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார்.
அதிமுக அலுவலகம் வந்த இபிஎஸ்
இந்நிலையில் 72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி பேட்டி
இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அதிமுக சோதனைகளை வென்று சாதனை படைத்துள்ளது. அதிமுகவில் பிளவு கிடையாது; ஒரு சிலர் மீது பொதுக்குழு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விரைவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணி தொடங்கும். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. 96 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர்.
ஓபிஎஸ் பற்றி கருத்து
ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒருவர், கொள்ளைக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதுபோல், ரவுடிகளோடு வந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை காலால் எட்டி உதைத்தார். அதனால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டிருக்கும் போது, திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கும் போது, அவரை மன்னிக்க முடியாது.
ஓபிஎஸ் ஒரு பச்சோந்தி
பச்சோந்தியை விட அதிக கலர் மாறுவார் ஓபிஎஸ். தர்மயுத்தம் செய்தது எதற்காக? சரி அதனை விடுத்தாலும், சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ். அதேபோல் அவர் கட்சிக்கு விஸ்வாசமாக இருந்தது கிடையாது. ஆனால் நான், 1989 முதல் இன்று வரை அணி மாறாமல் விஸ்வாசமாக இருக்கிறேன். அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார்.