ரகசியம் பரம ரகசியம்.. இதெல்லாம் ஒரு ரகசியமா.. பட்டென கேட்ட எடப்பாடி பழனிசாமி.. கோபத்தில் திமுகவினர்
எடப்பாடி பழனிசாமி அமைச்சர் உதயநிதியை கிண்டல் செய்து செய்தியாளர்களிடம் பேட்டி தந்துள்ளார்
சென்னை: நீட் விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார்.. இதையடுத்து, "உதயநிதிக்கு நோபல் பரிசு" குறித்து அதிமுகவினர் இணையத்தில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நீட் விலக்கை அமல்படுத்துவோம்' என்று அறிவித்த உதயநிதி, அது குறித்து மேலும் விளக்க மறுத்தவராக "அது ரகசியம்" என்று கூறியிருந்தார்..
அப்போதுமுதல், உதயநிதி வைத்திருக்கும் நீட் விலக்கு ரகசியம் என்ன? என்று எதிர்க்கட்சியினர் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.. மீடியாக்களிலும் விவாதங்கள் வெடித்து வருகின்றன..

எடப்பாடி பிரச்சாரம்
கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே, உதயநிதி ஸ்டாலினை அதிகம் சீண்டி எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துவந்த நிலையில், அதே யுக்தியைதான் நடந்து முடிந்த இடைத்தேர்தலின்போதும் பயன்படுத்தியிருந்தார். அதிலும், நீட் விஷயத்தில் முதல் கையெழுத்து என்று அன்று உதயநிதி சொன்னதை, விடாப்பிடியாக பிடித்து கொண்டுள்ள எடப்பாடி, அதை வைத்தே உதயநிதியின் இமேஜை தொடர்ந்து டேமேஜ் செய்யும் முயற்சியிலும் இறங்கி வருகிறார்.. இதனால் உதயநிதியும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வருகிறார்..

ரகசியம் என்ன
இப்படி இரு தரப்பிலுமே வெளிப்படையாக பொதுவெளியில் விமர்சிக்க துவங்கிவிட்டனர்.. "கடந்த 2021 பொதுத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக போய், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்னாரே. இதோ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலே வந்துவிட்டது. இப்பவாவது அந்த ரகசியத்தை சொல்லுங்க என்று எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டு வருகிறார்.. அதற்கேற்றவாறு 4 நாட்களுக்கு முன்பு உதயநிதியும், அரியலூரில் நடந்த விழாவில் இதற்கு பதிலளித்திருந்தார்..

சீக்ரெட் என்ன
"நான் தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வு ரகசியம் என்று குறிப்பிட்டதை இப்போது எதிர்க்கட்சித் தலைவர் "அது என்ன?" என்று ஒவ்வொரு மேடைகளிலும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.. தமிழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வை நான் ஏற்கவில்லை. திமுக நீட் தேர்வு ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டத்தினை தொடரும் என்று சொல்லிவிட்டு வந்துள்ளேன்... திமுக சார்பில் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்பதுதான் என்னுடைய நீட் தேர்வின் ரகசியம்" என்று கூறி அந்த சீக்ரெட்டை உடைத்திருந்தார். உதயநிதியின் இந்த பதில், பொதுவெளியில் அதிகம் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும், மறுபடியும் உதயநிதி சொன்ன அந்த நீட் தேர்வு ரகசியம் என்ன என்று எடப்பாடி பழனிசாமி விடாமல் கேட்டு வருகிறார்..

வாக்குறுதிகள்
நேற்றைய தினம், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.. பட்ஜெட் குறித்தான விமர்சனங்களை எடப்பாடி தெரிவித்தாலும்கூட, அப்போதுகூட உதயநிதியின் நீட் விவகாரத்தை கையில் எடுத்து பேசினார்.. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் பலதும், அவர்களின் 3வது பட்ஜெட் அறிவிப்பிலும் இடம்பெறாதது ஏன்? சட்டப் போராட்டம் நடத்துவதுதான் நீட் விலக்கு ரகசியமாம். ஏன் நாங்கள் நடத்தவில்லையா? உதயநிதி வெளியிட்டுள்ள நீட் விலக்கு ரகசியத்துக்காக, அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்" என்று சீறினார் எடப்பாடி. உடனே, 'உதயநிதிக்கு நோபல் பரிசு' என்று அதிமுகவினர் பதிவிட்டு, ட்ரோல் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications