கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்குய்யா... எடப்பாடியார்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார் ஆர்.பி உதயகுமார்
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் அவரை முன்னிறுத்தி ஏற்கனவே மூன்று தேர்தல்களை சந்தித்து விட்டோம் சட்டசபைத் தேர்தலையும் எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தியே சந்திப்போம் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஒருபக்கம் இருந்தாலும் சட்டசபை தேர்தல் பணிகளும் பரபரப்பாகவே இருக்கிறது. திமுகவில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான் என்று உறுதியாகவே கூறி வருகின்றனர்.
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர் செல்வம் கட்சியை வழிநடத்தி வருகிறார். இரண்டு தலைமை இருப்பதால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி பல கருத்துகள் உலா வருகின்றன.

பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ
அதிமுகவில் முதல்வர் யார் என்று பரபரப்பை கிளப்பியவர் அமைச்சர் செல்லூர் ராஜூதான். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்தான் சட்டசபைத் தேர்தலுக்கு பின்னர் எம்எல்ஏக்கள் கூடி முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என்று கொளுத்தி போட்டார்.

ராஜேந்திர பாலாஜி ட்வீட்
இந்த சூழ்நிலையில்தான் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு பதிலடி தரும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதிய ட்வீட் ஒன்று போட்டார். அதில் எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021ம் நமதே! என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதல்வரும் துணை முதல்வரும் முதல்வர் பற்றிய பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் சலசலப்பு
முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சலசலப்பு நிலவுவதாக கூறப்பட்ட நிலையில் இன்று மதுரையில் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம் என்று கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தியே லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தலை சந்தித்திருக்கிறோம். அதே போல 2021 சட்டசபைத் தேர்தலையும் சந்திப்போம்

எளிமையான முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி எளிமையின் அடையாளமான முதல்வர் வலிமையான அரசு என்று என்று நிரூபித்திருக்கிறார். அதிமுகவினர் ஒற்றுமையாக இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு உள்ளது. அவர்கள்தான் எங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றும் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

2021ல் வெற்றி பெறுவோம்
2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு இந்த அரசு பிழைக்குமா என்று கேலி செய்தனர் வலிமையான நிலையான ஆட்சியை கொடுத்திருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை முன்னிறுத்தியே தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறோம். இனி வரும் தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

அதிமுக அரசு தொடர்ந்து இருக்கும்
இந்த அரசு நூற்றாண்டுகாலம் இருக்க வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் லட்சியம், அவரது முழக்கமாக இருந்தது. ஒவ்வொரு அதிமுகவினரின் லட்சியமும் கனவும் அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்பதுதான். ஜெயலலிதாவின் அரசு தொடர்ந்து இருக்கும்
மினி பொதுத் தேர்தல் என்று கூறப்பட்ட 22 சட்டசபை தொகுதி, உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் என அனைத்துமே எடப்பாடி பழனிச்சாமியைத்தான் முன்னிறுத்தியுள்ளோம். இனியும் அதையே தொடருவோம் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.












Click it and Unblock the Notifications