தொண்டனும் உயர்ந்த இடத்துக்கு வரலாம்... இது அதிமுகவில் மட்டுமே சாத்தியம்.. இ.பி.எஸ்.உணர்ச்சிகர பேச்சு
சென்னை: தொண்டனும் உயர்ந்த இடத்துக்கு வரமுடியும் என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்ந்துபோவார்கள் என்றும் தேர்தல் எனும் போரிலே எதிரிகளை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திமுக மீது அட்டாக்
அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த எடுப்பிலேயே திமுக மீதான அட்டாக்கை தொடங்கினார். தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அவதூறு பிரச்சாரங்களை செய்து வருவதாகவும் அரசு மீதான செல்வாக்கை கண்டு அவர் எரிச்சல் படுவதாகவும் விமர்சித்தார்.

மக்களிடம் எடுபடாது
மக்களிடன் ஸ்டாலின் வாங்கும் கோரிக்கை மனுக்களை அரசிடமே அவர் அளிப்பதில்லை என்றும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வெற்றிபெற்றதை போல் சட்டமன்றத் தேர்தலில் திமுகவால் வெற்றிபெற முடியாது எனவும் கூறினார். மக்கள் சட்டமன்றத் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் பிரித்து பார்த்து வாக்களிப்பதாக கூறினார்.

தொண்டர்கள்
ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது மக்களுக்கு என்ன செய்தார் எனக் கேள்வி எழுப்பிய அவர், வாரிசுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி திமுக என சாடினார். அதிமுகவை பொறுத்தவரை தொண்டனும் முதலமைச்சராக வர முடியும் என்பதற்கு தாம் தான் உதாரணம் என்றும் நாளை நீங்களும் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, வர முடியும் என கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களை பார்த்து முதலமைச்சர் கூறினார்.

30 ஆண்டுகாலம்
மேலும், அதிமுக தேர்தல் பிரச்சார மேடையில் அமர்ந்திருப்பவர்களை சுட்டிக்காட்டி பேசிய அவர், இங்கு அமர்ந்திருப்பவர்கள் யாரும் தொழிலதிபர்களோ, மிட்டா மிராசுதாரர்களோ இல்லை என்றும் அனைவரும் சாமானியர்கள் தான் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான் என பெருமிதம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications