இன்னொரு சார் யாரு? எடப்பாடி பழனிசாமி விடலையே.. அண்ணா பல்கலை மாணவி விவகாரம்.. அதிமுக இன்று போராட்டம்
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்து, இன்று அதாவது 30ம் தேதி அதிமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், அண்ணா பல்கலை விவகாரத்தை சுட்டிக்காட்டி, திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

"கடந்த 23ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழகத்தில் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது.
வன்கொடுமைகள்: பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில்கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை விடியா தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை. திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என கடந்த 27ம் தேதி அறிவித்திருந்தார்.
ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அன்றைய தினம் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திடீரென அறிவிப்பு வெளியாகியிருந்தது.
ஞானசேகரன்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. கைதான ஞானசேகரன் இன்னொரு சார் என்று ஒருவரை குறிப்பிட்டதாக பாதித்த மாணவி புகார் அளித்துள்ளார். அவர் யார் என்பதை வெளிக்கொண்டு வரவேண்டும்.
விசாரணை நேர்மையாக நடைபெறவில்லையெனில் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். அதிமுக சார்பில்நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் 30ம் தேதி நடைபெறும்" என்று கூறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, இன்றைய தினம் ஏற்கனவே அறிவித்தபடி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
விளக்கம்: முன்னதாக சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி, வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. புகார் கொடுத்த ஒரே நாளில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்டவர் வேறு ஒருவருடன் பேசியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஞானசேகரனால் வேறு யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள மு.க.ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஞானசேகரன்: மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும்
தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது. அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? #யார்_அந்த_SIR ?' என தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications