சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டது.. எடப்பாடி பழனிச்சாமி காட்டம்
சென்னை: தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் சொன்ன நிலையில், நேற்று மாலையே சென்னையில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் 6 பேர் கொண்ட கும்பலால் பா.ஜ.க நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு ட்விட்டரில் திமுக அரசை விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டதையும் அதன் காரணமாகவே சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதையும் இது அப்பட்டமாக காட்டுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொலைநகரம்
தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி "சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது. காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிகைகளின் கருத்துகளை முடக்குவதிலேயே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது" என நேற்று ட்வீட் செய்திருந்தார்.

பாஜக பிரமுகர் கொலை
இந்நிலையில், நேற்று மாலை சென்னையில் 6 பேர் கொண்ட கும்பலால் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவரான பாலச்சந்தர் (34) அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
பாலச்சந்தரை வெட்டிக்கொன்ற கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாலச்சந்தர் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பாதுகாப்புக்கு காவலர் கேட்டதால் அவருக்கு பாதுகாப்பு காவலர் வழங்கப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த நேரத்தில் பாலச்சந்தர் தனது நண்பர்களுடன் பேசிவிட்டு வருவதாக சென்றபோது பாதுகாப்பு காவலர் டீ குடித்துவிட்டு வருவதாக பாலச்சந்தரிடம் கூறிவிட்டு அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போதுதான் பாலச்சந்தரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், இந்தக் கொலை சம்பவத்தைக் குறிப்பிட்டு ஸ்டாலின் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து, தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாலையே சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். இது சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டதையும் அதன் காரணமாகவே சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதையும் அப்பட்டமாக காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த விடியா அரசு?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications