கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜராகவில்லை.. ஏன் என்னாச்சு?
சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புபடுத்தி பேசியதாக, தில்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில், சாட்சியம் பதிவு செய்வதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜராகவில்லை.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டில்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எட்பபாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஜனவரி 30, 31ம் தேதிகளில் ஆஜராகி சாட்சியம் வழங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படவில்லை. அத்துடன் பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துக்களை நீக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவர் இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications