ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேரை.. அதிமுகவில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி! அதிரடி அறிவிப்பு
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த குரல்கள் எழுந்தது முதலே அங்கு அடுத்தடுத்து பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி
அத்துடன் அந்தக் கூட்டத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.பிராபகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களிலேயே ஓபிஎஸ் மகன்கள் ஓ.பி. ரவீந்திரநாத் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்து அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ்
இதற்கிடையே இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட 22 பேரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக அறிவித்த ஓபிஎஸ், இன்றைய தினம் உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை நியமிப்பதாகவும் அறிவித்தார்.

எடப்பாடி அறிவிப்பு
இந்தச் சூழலில் அதிமுக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக கொள்கைகளுக்கும் , குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் , கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் , அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் இவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

15 பேர்
கு.ப. கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் திரு . C. ராஜேந்திரன் K.S. சீனிவாசன் ராஜலட்சுமி முகம்மது அலி ஜின்னா, ஆம்னி பஸ் அண்ணாதுரை உள்ளிட்ட 15 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இவர்கள் உடன் கட்சியின் தொண்டர்கள் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் எடப்பாடி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதிருப்தி
அதிமுக ஏற்கனவே வரிசையாக பல்வேறு தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதாக அறிவித்து வருவது கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியே ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications