பல கோடி மோசடி.. சிக்கிய எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் நண்பர்! தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 மாதங்களாக தேடப்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளரின் நண்பர் செல்வக்குமார் கொண்டலாம்பட்டியில் கைது செய்யப்பட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவரின் தனிப்பிரிவு உதவியாளராக மணி இருந்தார். இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர்.
இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார்கள் வந்தன.

நெய்வேலி மாவட்டம்
நெய்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மின்சாரத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். இதன் பேரில் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி மற்றும் மணியின் நண்பர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இருவர் கைது
இதையடுத்து தலைமறைவான இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியை தேடி வந்தனர். இவர் எடப்பாடி பழனிச்சாமியின் ரைட் ஹேண்ட் என்றே சொல்லப்பட்டது.

கைது
இவர் தீவட்டிப்பட்டி அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் அவரை போலீஸார் கடந்த மாதம் 28ஆம் தேதி கைது செய்தனர். இவரை ரகசிய இடத்தில் வைத்தும் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமாரை கொண்டலாம்பட்டியில் வைத்து தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

விசாரணை
செல்வக்குமார் ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் எடப்பாடியார் பேரவை என்ற அமைப்பை தொடங்கி வைத்துக் கொண்டு அவருடன் தனக்கு நெருக்கம் இருப்பதாக காண்பித்து கொண்டதாக தெரிகிறது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் இன்னும் சிலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications