"நவீன இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா".. எடப்பாடி பழனிசாமியின் புத்தாண்டு வாழ்த்து கடிதம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து கடிதம் வைரலாகி வருகிறது.
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தது, தமிழகத்தில் நீட்டை திணித்தது, 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வைத்தது என அனைத்திலும் பாஜகவின் பங்களிப்பு இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இவ்வளவு ஏன் கட்சிக்குள் சசிகலாவை சேர்ப்பதா வேண்டாமா என ஒரு பிரச்சினை ஓடி கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவில் சசிகலாவை சேர்க்குமாறு பாஜக அறிவுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது.

பாஜக
அதிமுக ஆட்சி கவிழாமல் பார்த்துக் கொண்டதில் பாஜகவுக்கு பங்கிருந்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாக அவரது கட்சியினரே தெரிவித்தனர். அது போல் ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்த பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை பெரும்பாலான தொண்டர்கள் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

சட்டசபை தேர்தல்
கடந்த இரு முறை நடந்த சட்டசபை தேர்தலில் தொடர்ந்து ஜெயலலிதாவின் அதிமுக வென்றது. மூன்றாவது முறையாக அதிமுகவே இந்த தேர்தலில் வெல்லும் என அதிமுக மூத்த தலைவர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் இந்த முறை ஆட்சியை இழந்ததாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஒரு கூட்டத்தில் தெரிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாஜக விமர்சனம்
இதே போல் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அது போல் எப்போது பேட்டி கொடுத்தாலும் திமுக வெர்சஸ் பாஜக என்ற நிலை வரும் என்று அண்ணாமலை சொன்னதிலிருந்து அதிமுகவை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அமித்ஷா
இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு புத்தாண்டு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் நவீன இந்தியாவின் இரும்பு மனிதராய் திகழும் மாண்புமிக மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது எதிர்க்கட்சித் தலைவர் லெட்டர் பேடில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேல்தான் இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் அமித்ஷாவை நவீன இந்தியாவின் இரும்பு மனிதர் என எடப்பாடி பழனிச்சாமி அழைத்திருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications