ஜெயலலிதா, சசிகலாவுக்கு துரோகம்.. அதிகார போதைக்கு சொந்தக்காரர்..இபிஎஸை வெளுத்து வாங்கிய வைத்திலிங்கம்
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கிறார்கள்.
இருந்தும் ஓ பன்னீர் செல்வம் அதிமுகவின் 75 மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமித்ததோடு, கட்சியின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை அறிவித்தார். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளின் போட்டி பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

அரசியல் வனவாசம்
ஓ.பன்னீர்செல்வத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், 88 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேசுகையில், திமுகவில் இருந்து எம்ஜிஆரை அவசர அவசரமாக நீக்கியதால், 15 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியாமல் வனவாசம் சென்றார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இதனை எதற்காக சொல்கிறேன் என்றால், பதவி ஆசை பிடித்து யார் ஒருவர் தவறாக நடந்தாலும், அவர்கள் அரசியலில் வனவாசம் போய்விடுவார்கள். அப்படி, கூடிய விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசியல் வனவாசம் போய்விடுவார்.

இபிஎஸ் செய்த துரோகம்
அதிமுக என்ற கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி செய்த தியாகம் என்ன. அவர் நன்றி மறப்பதும், துரோகத்தை மட்டுமே செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தவழ்ந்து போல் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கிய சசிகலாவுக்கும், ஆட்சியமைக்க துணையாக இருந்த டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் 4 ஆண்டுகள் ஆட்சி நடக்க காரணமாக இருந்த ஓபிஎஸ்-ஐ அரசியலில் இருந்து அப்புறப்படுத்த துடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிகார போதை
அதிகார போதைக்கு சொந்தக்காரர் தான் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியது போது, தொண்டர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை கொண்டு வந்தவர். தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை, நீக்க பொதுக்குழுவுக்கோ, செயற்குழுவுக்கோ அதிகாரம் கிடையாது. அதனால் 2026 வரை ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளராக தொடர்வார்.

ஒன்றுபட்டால் வாழ்வு
அதிமுக ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்டால் மட்டுமே வாழ்வு. இல்லையென்றால் தாழ்வு தான். எம்ஜிஆர், ஜெயலலிதா காத்து வந்த இயக்கத்தை, அனைவரும் பாதுகாக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி நடத்தியது பொதுக்குழு அல்ல. அது ஒரு பொய்க் குழு. விரைவில் இரட்டை இலை சின்னம் நம்மிடம் வரும். நாம் தான் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க போகிறோம்.

இரட்டை இலை முடக்கம்
இரட்டை இலை சின்ன முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி தனிமரமாகிவிடுவார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள் யாரும் உடனிருக்க மாட்டார்கள். நன்றியை மறப்பதே தொழிலாக கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்று கடுமையாக சாடினார்.












Click it and Unblock the Notifications