200 தொகுதி பந்தயம் அடிக்கிறோம்னு சொன்னீங்களே! அமித் ஷாவுக்கு போனைப் போட்ட எடப்பாடி! அதகள அதிமுக!
சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி மூலம்
பேசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என பாஜக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், தவெக அரசுக்கு அதிமுகவின் ஒரு பிரிவு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில், அடுத்தகட்ட நகர்வு குறித்து எடப்பாடி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது. பல தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, பல முன்னணி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இந்த தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்த சூழலில், நேற்று காலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பிளவு
அந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எப்படிப் பதிலளிப்பது, சட்டமன்றத்தில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகளுக்கு எதிராக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, அந்த அணியைச் சேர்ந்த சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
எஸ்பி வேலுமணி
இதையடுத்து, சி.வி. சண்முகம் தலைமையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 38 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக 25 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தது எடப்பாடி தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அமித் ஷா
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி மூலம் பேசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, "தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தான் நான் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கூறியிருந்தேன். ஆனால் சில முன்னாள் அமைச்சர்கள் அவசர அவசரமாக தவெகவுக்கு ஆதரவு அளித்து விட்டனர்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி
மேலும், "தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர விஜய் விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது நாமாக சென்று ஆதரவு அளிப்பது ஏன்? என்று நான் கேட்டேன். ஆனால் சிலர் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆதரவு அளித்துள்ளனர்" என்றும் பழனிசாமி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி
இதற்கு பதிலளித்த அமித் ஷா, "திமுக மேற்கொண்ட அரசியல் அணுகுமுறையையே தற்போது தவெகவும் பின்பற்றுகிறது. நிலைமை எப்படி மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக தற்போது இரண்டு அணிகளாக வெளிப்படையாக செயல்பட தொடங்கியுள்ளது. ஒரு தரப்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், மறுபுறம் எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணியும் செயல்பட்டு வருகின்றன.
சபாநாயகர்
இதற்கிடையே சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் இந்த பிளவு வெளிப்படையாக தெரிந்தது. எடப்பாடி அணியினர் அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், வேலுமணி அணியினர் ஆதரவாக வாக்களித்தனர். இந்நிலையில், இதற்கிடையே, அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் யார் என்ற விவகாரமும் சபாநாயகர் முடிவுக்காக காத்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பினரும் தங்களுக்குத் தான் ஆதரவு என சபாநாயகரிடம் கடிதம் வழங்கியிருப்பதால், அடுத்த கட்டமாக சபாநாயகர் எடுக்கும் முடிவை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications