பட்டப்பகலில் கழுத்தறுத்து ஆணவக்கொலை.. நெஞ்சு பதறுதே.. கொலைக்களமா தமிழ்நாடு? எடப்பாடி பழனிசாமி வேதனை!
கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவத்தைக் குறிப்பிட்டு திமுக அரசை விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
சென்னை : பட்டப்பகலில் இளைஞர் கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மகளை காதல் திருமணம் செய்த மருமகனை பெண் வீட்டார் நடுரோட்டில் வெட்டி ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி இந்த கொடூரக் கொலை தொடர்பான வீடியோவையும் ட்விட்டரில் பகிர்ந்து, திமுக அரசை விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ஜெகனும் அவதானப்பட்டியை அடுத்த புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு சரண்யா குடும்பத்தினர் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி ஜெகன், சரண்யா இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

வெறிச்செயல்
இதனால், சரண்யாவின் குடும்பத்தினர், ஜெகன் மீது கொலைவெறியில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் வேலைக்காக ஜெகன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டேம் ரோடு மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் ஜெகனை கீழே தள்ளி கால்களை இருவர் பிடித்துக்கொள்ள ஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார் சங்கர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அதிர்வலை
இந்த கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளை காதல் திருமணம் செய்த ஜெகனை கொலை செய்ததாக ஜெகனின் மாமனார் சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடு ரோட்டில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான வீடியோ பார்ப்போரை பதற வைத்துள்ளது.

நெஞ்சைப் பதற வைக்கிறது
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிப் போயிருப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில், நடுரோட்டில் இளைஞர் கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது.

கொலைக்களமாக
அரசியல் கொலை, ஆதாயக்கொலை, ஆணவக்கொலை என குற்றவாளிகள் அச்சமின்றி வாடிக்கையாக செயல்படும் இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிப் போயிருப்பது வேதனைக்குரியது" எனத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி இந்த கொடூரக் கொலை தொடர்பான வீடியோவையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications