“டவுட்டே” வேணாம்.. பாஜகவுடன் அதிமுக இனி கூட்டணி வைக்காது! கட்சி கூட்டத்தில் எடப்பாடி பேசியது என்ன?
சென்னை: பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்துவிடுமோ என்ற சந்தேகமே வேண்டாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.
பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக ஒருமனதாக முடிவெடுத்தது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் அறிக்கை வெளியிட்டது.

அதில், ""தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் சுழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில் அவர், "பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து சந்தேகப்பட வேண்டாம். பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்துவிடுமோ என்ற சந்தேகமே வேண்டாம். மக்களுக்கு சந்தேகம் இருந்தால் கட்சியின் கருத்தை உறுதியாக எடுத்து செல்லுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications