புழலுக்கு போகப் போகிறார் எடப்பாடி.. இடிஅமீனை விட்டு நிர்வாகிகள் விலகி வருகின்றனர் - மருது அழகுராஜ்
சென்னை : புழலுக்கு எடப்பாடி பழனிசாமியும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓ.பன்னீர்செல்வமும் செல்லும் காலம் உருவாகும் என அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தன்னை மட்டும் அதிபர் என்று அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தார் எனக் குற்றம்சாட்டியுள்ளார் மருது அழகுராஜ்.
இடிஅமீன் எடப்பாடி பழனிசாமியை விட்டு நிர்வாகிகளும் தொண்டர்களும் விலகி ஓபிஎஸ் பக்கம் அணிவகுக்கத் தொடங்கி விட்டனர் என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
அதிமுக செய்தித் தொடர்பாளரும், 'நமது அம்மா' நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் இன்று பேட்டி அளித்துள்ளார்.

மருது அழகுராஜ்
அதிமுக செய்தித் தொடர்பாளரான மருது அழகுராஜ், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது எம்.ஜிஆர்' ஆசிரியராக இருந்தவர். பல ஆண்டுகாலம் ஜெயலலிதாவுக்கு உரை, அறிக்கைகள் எழுதிக் கொடுத்தவர். ஜெயலலிதாவின் பல புகழ்பெற்ற பேச்சுகளுக்குப் பின்னணியாக இருந்தவர். ஜெ. மறைவுக்குப் பிறகு எடப்பாடி தரப்பு தொடங்கிய‘நமது அம்மா' நாளிதழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

பணியிலிருந்து விலகிய மருது
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் வகையிலான ஈபிஎஸ் தரப்பினரின் செயல்களால் அதிருப்தி அடைந்து ‘நமது அம்மா' நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்ட அவர், தற்போது கடுமையாக ஈபிஎஸ் தரப்பை சாடி பேசி வருகிறார். குறிப்பாக, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ் தரப்பை குற்றம்சாட்டி கருத்து தெரிவித்து வருகிறார் மருது அழகுராஜ்

கோடநாடு கொலை கொள்ளை விவகாரம்
மருது அழகுராஜ் சமீபத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசாரின் விசாரணைக்கும் ஆஜராகி இருந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மருது அழகுராஜிடம் சுமார் 5 மணி நேரம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான சேலம் இளங்கோவனையும் விசாரிக்க வேண்டும் என மருது அழகுராஜ் கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இடிஅமீன் எடப்பாடி
இந்நிலையில் இன்று, உண்மை எத்தனை இடங்களில் வைத்து உரசிப் பார்த்தாலும் அது உண்மையாகத்தான் இருக்கும். தன்னை மட்டும் அதிபர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தார். இடிஅமீன் எடப்பாடி பழனிசாமியை விட்டு நிர்வாகிகளும் தொண்டர்களும் விலகத் தொடங்கி விட்டனர் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

புழல் சிறைக்கு செல்லும் பழனிசாமி
புழலுக்கு எடப்பாடி பழனிசாமியும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓ.பன்னீர்செல்வமும் செல்லும் காலம் உருவாகும். ஜெயலலிதா கனவை நனவாக்குவோம் என ஒற்றுமையை வலியுறுத்தும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நிர்வாகிகள் அணிவகுக்க தொடங்கிவிட்டனர் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு
கோடநாடு வழக்கு விசாரணையில் ஆஜரான மருது அழகுராஜ், அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்து, ஓபிஎஸ் கை லேசாக ஓங்கியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி புழல் சிறைக்குச் செல்வார் எனக் கூறி இருப்பது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications