அரசியல் Hub-ஆன அப்பல்லோ! ராமதாஸுடன் எடப்பாடி பழனிசாமி அரை மணி நேரம் ரகசிய பேச்சு! உறுதி செய்த அருள்
சென்னை: சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை நலம் விசாரிக்க சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 30 நிமிடங்கள் தனியே பேசியதை அருள் எம்எல்ஏ உறுதிப்படுத்தியுள்ளார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து வெளிப்படையாக தெரியவில்லை.
பாமக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் (86), வழக்கமான இதயப் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை (Angiogram) மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையில், அவரது இதய இரத்தக் குழாய்கள் நன்றாக இருப்பதாகவும், அடைப்புகள் எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இன்று வீடு திரும்புகிறார்
பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதய பிரச்சினையா
மூத்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சையும் கண்காணிப்பையும் அளித்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள்
டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். கடந்த இரு தினங்களாக அரசியல் கட்சியினர் அப்பல்லோவுக்கு விசிட் அடிப்பதால் அந்த மருத்துவமனையில் அரசியல் ஹாட்ஸ்பாட்டாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று, ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஸ்டாலின் சென்றதும் ராமதாஸ் கைகளை பற்றிக் கொண்டதால் அவர் நெகிழ்ச்சி அடைந்தார். ஸ்டாலினுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே என். நேரு ஆகியோர் சென்றிருந்தனர்.
ஆறுதல் சொன்ன இபிஎஸ்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் மருத்துவமனைக்குச் சென்று ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் ராமதாஸின் குடும்ப உறுப்பினர்களான மகள் காந்திமதி, மனைவி சரஸ்வதி அம்மாளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மருத்துவருடன் ஆலோசனை நடத்தி ராமதாஸின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் ராமதாஸுடன் தனியாக அரை மணி நேரத்திற்கு எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படாத நிலையில் இதை அருள் எம்எல்ஏ தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் உறுதிபடுத்தினார்.
பாமக கூட்டணி
இருவரும் அதிமுக பாமக கூட்டணி குறித்து பேசியிருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் அதுகுறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ராமதாஸ்- எடப்பாடி பழனிசாமி தனியே பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்புமணிக்கு பாஜகவுடன் கூட்டணி செல்ல விருப்பம். ஆனால் பாஜகவால் கடந்த காலங்களில் தோற்றதே போதும் என்பதால் இந்த முறை பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டாம் என்ற முனைப்பில் ராமதாஸ் இருந்து வருகிறார்கள் என சொல்கிறார்கள். இந்த நிலையில் ராமதாஸுடன், எடப்பாடி பழனிசாமி என்ன பேசியிருப்பார் என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறார்கள்.
சீமான், கமல் சந்திப்பு
மேலும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். இன்றைய தினம் மாநிலங்களவை எம்பி கமல்ஹாசன், நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் ராமதாஸை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
எப்படி இருக்கிறார்
டாக்டர் ராமதாஸ் உடல்நலப் பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரது உடல்நிலை குறித்து கட்சியினர் அச்சப்படத் தேவையில்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications