பிறக்கும் குழந்தை மீது ரூ.1.5 லட்சம் கடன்.. சூப்பர் முதல்வரின் சாதனை இதுதான்.. எடப்பாடி பழனிசாமி!
கடலூர்: இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பிறக்கும் குழந்தை கூட ரூ.1.5 லட்சம் கடனுடன் இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிப்பதாக விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா பாணியில் ஒரு ஆண்டுக்கு முன்பாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கோவை, விழுப்புரம் மாவட்டங்களை தொடர்ந்து இன்று கடலூரில் மக்களை சந்தித்து வருகிறார்.

கடலூரில் எடப்பாடி பழனிசாமி
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திடீரென 30 லட்சம் மக்களை தேர்வு செய்து மாதம் ஆயிரம் கொடுப்பேன் என்கிறீர்களே.. இது நியாயமா? இது மக்களை ஏமாற்றுவது இல்லையா.. குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று திமுக இதனை கொடுக்கவில்லை. தேர்தலுக்கு வாக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கொடுக்கிறார்கள்.
சூப்பர் முதல்வர்
இதனால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் பேசும் போது, இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் என்று சொல்கிறார்.. எதில்? கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர்.. மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் கொடுப்பதற்கு கடன் வாங்கி கொடுக்கிறார். அரசின் வருவாயை அதிகரிக்கவில்லை. இந்த கடனை யார் அடைப்பது? இந்தக் கடன் மக்கள் தலையில் வந்து நிற்கும்.
ரூ.4.38 லட்சம் கோடி கடன்
கடனை அடைப்பதற்காக வரியை அதிகரிப்பார்கள். தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சி வருவதற்கு முன் 73 ஆண்டு காலம் அனைத்து கட்சிகளின் ஆட்சியும் நடைபெற்றது. இந்த 73 ஆண்டுகளில் ரூ.5.18 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். நடப்பாண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
பிறக்கும் குழந்தை தலையில் கடன்
இதன் மூலமாக இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதற்காகவா திமுகவிடம் ஆட்சியை மக்கள் கொடுத்தார்கள்? பிறக்கும் குழந்தைக்கு கூட ரூ.1.5 லட்சம் கடன் இருக்கும் நிலை உள்ளது. கடன் மேல் கடன் வாங்கி வரி சுமத்தியே கடனை திருப்பி கொடுக்க முடியும். இதற்கு வட்டி, அசலை கொடுக்க வேண்டும்.
மின்சார கட்டணம்
நாட்டு மக்களை கடனிலேயே தத்தளிக்கவிட்டது திமுக தான். மக்களிடம் திமுக செல்வாக்கை இழந்துவிட்டது. மக்கள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் அதிமுக ஓடி வந்து உதவி செய்யும். மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications