அதிமுகவை குன்றாமல், குறையாமல் எடப்பாடி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார்: ஓ.எஸ்.மணியன்
சென்னை: பூனை கண்ணை மூடினால் உலகமே இருட்டுனு நினைக்குமாம், அதுபோலதான் ஓ.பி.எஸ்.-யின் கதை உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் விமர்சித்துள்ளார்.
சென்னை, வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுது. இந்தப் பொதுக்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலராக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். மேலும் இந்தப் பொதுக்குழுவில், கட்சியின் பல்வேறு சட்ட விதிகளும் திருத்தப்பட்டன.

பொதுக்குழுவின் சிறப்பு தீர்மானத்தின் மூலம், கட்சி விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதாக அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்பட்டார். வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். பொதுச்செயலாளர் பொறுப்புக்கள், தேர்தல் இன்றைய தேதியிலிருந்து 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர்களான, நத்தம் விசுவநாதன் மற்றும் V.ஜெயராமன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடிப் பழனிசாமி நீக்கி வரும் நிலையில், மறுபுறம் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி நடத்தியது பொதுக்குழுக்கூட்டம் அல்ல பொய்க்கூட்டம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பூனை கண்ணை மூடினால் உலகமே இருட்டுனு நினைக்குமாம், அதுபோலதான் அவரது கதை உள்ளதாக கூறினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்த சட்டத்தின் அடிப்படையில் அதிமுகவை குன்றாமல், குறையாமல் எடப்பாடி பழனிசாமி வளர்ச்சிப் பாதையில் எடுத்து செல்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். இது உயர்நீதிமன்றத்தால், உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அதிமுக தொண்டர்கள் எந்த காலத்திலும் எந்த சோதனையிலும் தடம் மாறாதவர்கள். அவர்களின் ஆதரவோடுதான் அதிமுக வீறு நடை போடுகிறது என்று ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications