எமிஸ் தளத்தில் இறுதித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம்.. பள்ளிகளுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை: ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆண்டு இறுதி தேர்வுகளின் போது தேர்வுக்குரிய வினாத்தாள்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) தளத்தில் பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே கசிந்துவிடாதபடி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு முடிந்ததும், அதனைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடைபெற போகிறது. அந்த வகையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டில் இதேபோல் ஆண்டு இறுதித் தேர்வின் போது, சில தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் இந்த தேர்வில் அதிக கவனமுடன் செயல்படவேண்டும் என பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிகளுக்கு, கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆண்டு இறுதி தேர்வுகளின் போது தேர்வுக்குரிய வினாத்தாள்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) தளத்தில் பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே கசிந்துவிடாதபடி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
அதேநேரம் வரும் காலங்களில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள், அந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மீது கடுமையாக துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தேர்வுப் பணிகளில் சுணக்கம் இன்றி கவனமாக செயல்படுவதோடு, ஆண்டு இறுதித்தேர்வை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காதவாறு முடிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 5-ந்தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைய உள்ளது.
இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முதல் நாளான நாளை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications