தமிழகத்தில் டெட் தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்! கல்வியாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை
சென்னை: ஆந்திரா மற்றும் தெலங்கானாவை போல, தமிழ்நாட்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TNTET) தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து கல்வியாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை பின்வருமாறு, "இந்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப் (RTE)படி ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறுதல் கட்டாயம் ஆகும். ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, பீகார், நாகலாந்து, சத்தீஸ்கர் போன்ற பெரும்பாலான மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 90 ஆகவும் BC/MBC/SC/ST/DNC/PWD ஆகிய இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 75 ஆகவும் உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 2014 ஆம் ஆண்டு வெளிவந்த சிறப்பு அரசாணைப்படி இன்னும் 82 ஆகவே உள்ளது . பிற மாநிலங்களில் தேர்ச்சி மதிப்பெண் குறைத்த பிறகும் தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் 10 ஆண்டுகளாக இந்த தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அரசு ஆசிரியர் பணி பெற இரண்டு வகையான போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு இது கூடுதல் மனச்சுமை தருகிறது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர் பணி பெறுவதற்கான தேர்வு அல்ல. இது ஆசிரியர் என்பதற்கான தகுதியை குறிக்கும் தேர்வு மட்டுமே.
தமிழ்நாட்டில் அரசு ஆசிரியராக பணி நியமனம் பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டிய சூழல் உள்ளது. முதலாவது நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படாமல் இருப்பதால் பல்வேறு ஆசிரியர்கள் இரண்டாவது போட்டித் தேர்வு எழுதி அரசு பணி பெறும் வாய்ப்பை இழக்கிறார்கள் . ஆசிரியர் தகுதித் தேர்வு மிக கடினமாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி விழுக்காடு குறைந்து கொண்டே வருகிறது
கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும் தமிழ்நாடு அரசு அரசு பணி அல்லாத வெறும் தகுதியை மட்டும் தீர்மானிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை ஆந்திரா ஒடிசா தெலுங்கானா பீகார் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் BC/MBC/SC/ST/DNC/PWD உள்ளிட்ட இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 75 ஆக குறைத்து வழங்க வேண்டும் .
ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் பரிசீலித்து மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சமூகநீதி, சம உரிமை கிடைத்திடச் செய்யுமாறு பத்தாண்டு காலமாக ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications