தோட்டத்து வீடு தான் குறி.. மூதாட்டியின் கதை முடித்த கும்பல்! திமுக அரசு திருந்தலை.. எடப்பாடி அட்டாக்
சென்னை: நாமக்கல் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டை கொலை சம்பவங்களுக்கு பிறகும் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லையா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து பணம் நகை கொள்ளை அடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடத்தில் மூன்று பேரும், சிவகிரியில் இரண்டு பேரும் கொலை செய்யப்பட்டு நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் என சிலரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு, அவர்கள்தான் இரு சம்பவங்களில் ஈடுபட்டனர் என்றும் காவல்துறை விளக்கம் அளித்து இருந்தது.

இந்த நிலையில் நாமக்கல்லில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குளத்துப்பாளையத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் சாமியாத்தாள், என்பவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வந்த மர்ம நபர்கள், பணம், நகை எதுவும் வீட்டுக்குள் இருக்கிறதா என கேட்டு மிரட்டினர். இதனால் அவர் சத்தமிட்டதால் கத்தியால் கழுத்து வாய் மற்றும் முகத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரே, உறவினர்களுக்கு தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டை கொலை சம்பவங்களுக்கு பிறகும் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லையா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டனத்தில், " நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், நம் அதிமுக ஐடி விங் சார்ந்த இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், அதற்குள் சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது. மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை!
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா? என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஒரு அக்னிப் பரீட்சையாக மாற்றிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள பதிவில்," நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த சீத்தம்பூண்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்து வீடுகளில் தனியாக வாழும் மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றைத் தடுக்கத் தெரியாமல் திமுக அரசு தடுமாறி வருவது கண்டிக்கத்தக்கது.
அண்மைக்காலங்களில் தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் பெரியவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றன. சாலையில் சென்றாலும், வீடுகளில் இருந்தாலும் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாடு வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. இதற்கெல்லாம் காரணமான செயல் திறனற்ற திமுக அரசை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications