தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஏப்ரல் 29 வரை வெளியிட கூடாது - தேர்தல் ஆணையம் உத்தரவு
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவோ, அதன் முடிவுகளை வெளியிடவோ கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த
சென்னை: லோக்சபா இடைத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
Recommended Video
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அசாம், மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் 2021 பிப்ரவரி 26, மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் தெரிவித்தபடி, சட்டசபைத் தேர்தல் நடைபெறும் அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மற்றும் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், மார்ச் 27ம் தேதி காலை 7 மணி முதல் 2021 ஏப்ரல் 29ம் தேதி மாலை 7.30 மணிக்கு இடைபட்ட காலத்தை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவும், அதன் முடிவுகளை அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் அல்லது வேறு விதத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்ட காலமாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 126ஏ பிரிவு துணைப்பிரிவு 1-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 126(1)(பி) பிரிவின் கீழ், மேலே கூறப்பட்ட சட்டசபை பொது தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஒவ்வொரு கட்ட தேர்தல் முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, கருத்து கணிப்பு அல்லது எந்தவித கணக்கெடுப்பு முடிவுகள் உட்பட தேர்தல் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் எலக்ட்ரானிக் ஊடகங்களில் வெளியிட தடைவிதிக்கப்படுகிறது. இது தொடர்பாக 2021 மார்ச் 24ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.