இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை நடத்தும் தேர்தல் ஆணையம்.. ஆஜராகும் தலைகள்
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது. அதிமுகவில் தலைமைப் பதவியை யார் வகிப்பது என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

அதிமுகவில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பயன்படுத்த தடை கோரியும், தங்களுக்கு ஒதுக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திர நாத் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 15 மனுக்கள் அளித்திருந்தனர். இந்த வழக்கை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமாகவும், நேரில் ஆஜராகியும் தங்கள் தரப்பு வாதத்தை கடந்த ஜனவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் இறுதி விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் இறுதி உத்தரவு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ஆம் தேதி, அதாவது இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications