எல்லாம் ஓகே தானே.. தமிழ்நாட்டில் இன்று ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை
சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழ்நாடு வந்துள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.
வரும் ஜூன் 16 ஆம் தேதி மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பதவி காலம் முடிவடைய இருக்கிறது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளை சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி இருக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 வது முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை வகுத்தன.

இந்த தேர்தலில் 'இந்தியா’ கூட்டணி பாஜகவை வீழ்த்தி மத்தியில் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது. தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. மார்ச் மாத இறுதியில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னைக்கு வருகை தந்தனர்.
நேற்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமை தேர்தல் அதிகாரிகள், தமிழ்நாட்டில் தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள், இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து நடத்தினர். நேற்று மதியம் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, சுங்கத்துறை, வருவாய் புலனாய்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை முதல் மாலை வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications