நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சென்னை: நாளை மாலை 6 மணிக்கு லோக்சபா தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்த பிறகு எந்தவொரு அரசியல் கட்சியும் வேட்பாளரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது.

பேஸ்புக், வாட்ஸ் ஆப், எக்ஸ் வலைதளம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது. நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீது 2 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும்.
வெளியூரிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்தவர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களை தங்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது. தேர்தல் ஏஜென்ட் ஒரு வாகனத்திலும் கட்சிக்காரர்கள் ஒரு வாகனத்திலும் பயணிக்க வேண்டும்.
வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு முன்பே அரசியல் கட்சியினர் தங்கள் தற்காலிக கூடாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கு இரு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாகன அனுமதி நாளை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கென ஒரு வாகனத்தில் பயணிக்கலாம்.
தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைகாட்சி, எஃப்எம், ரோடியோ, வாட்ஸ் ஆப், முகநூல், டிவிட்டர் போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.
எஸ்எம்எஸ், இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும். பொதுமக்களில் எந்த ஒரு நபரையும் ஈரக்கும் வகையில் எந்த ஒரு இசை நிகழ்ச்சி அல்லது எந்த ஒரு திரையரங்க செயல்பாடு அல்லது எந்த வித கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் பரப்புரை செய்ய கூடாது.
கல்யாண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும். வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் வாகன அனுமதிகள் நாளை மாலை 6 மணி முதல் செல்லாததாகிவிடும்.
வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கும் அல்லது வாங்குவதற்கும் அல்லது பயன்படுத்துவதற்கும் எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது. பிரச்சார கூடாரத்தில் தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு பல்வேறு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications