ரூ.173.85 கோடி பறிமுதல்! இலவச பொருள்களோ 35.78 கோடி! எங்கே போகிறது தமிழ்நாடு?
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை கணக்கில் வராத ரூ. 173.85 கோடியைப் பறிமுதல் செய்துள்ளதாகத் தமிழ்நாடு தேர்தல் அதிகாரிகள் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனுடன் நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என ஆக மொத்தம் 102 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கின்றது.

ஆகவே, அதற்காக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிப்பதற்காகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளதாக சாகு தெரிவித்தார்.
மேலும் இதற்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் விவரித்தார்.
தொடர்ந்து பேசிய சத்யபிரதா சாகு, "தமிழ்நாட்டில் 18 மற்றும் 19 வயது நிறைவடைந்த முதல்முறை வாக்காளர்கள் மொத்தம் 10.92 லட்சம் பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 4 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேர் உள்ளனர்.
அதைப்போலவே 85 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் உள்ளனர்" என்றார்.
அடுத்ததாக, "1,58,568 வாக்குப் பதிவு இயந்திரங்களும் 81,157 கன்ட்ரோல் யூனிட்களும், 86,858 விவிபேட்டும் பயன்படுத்தப்படவுள்ளன. 44,800 வாக்குச் சாவடிகள் வெப் கேஸ்டிங் நுட்ப முறையில் வாக்குப் பதிவு நேரடியாகக் கண்காணிக்கப்படும். 65 சதவீத வாக்குச் சாவடிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும்" என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

"தேர்தல் களத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் உள்ளனர். அதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேர். பெண்கள் 76 பேர். வாக்கு எண்ணிக்கைக்காக 39 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவான தேர்தல் கண்காணிப்பாளர்கள் 39 அதிகாரிகளும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் 20 அதிகாரிகளும் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க 58 அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திலிருந்து மத்திய ஆயுத போலீஸ் படையினர் 190 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதில் தேர்தல் முடிந்த பிறகு 50 மத்திய காவல்துறையினரை வாக்கு எந்திரங்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்த உள்ளோம்" என்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் அளித்த செய்திதான் அதிர்ச்சி ரகம். நேற்று வரை ரூ.173.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் பரிமுதல் செய்யப்பட்டுள்ள மதுபானங்களின் மதிப்பு 6.67 கோடி என்றும் இலவச பொருட்களின் மதிப்பு 35.78 கோடி என்றும் குறிப்பிட்டார்.
இதுவரை தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் 4861 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் 22 புகார் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் கூறினார். மற்ற புகார்கள் மீது நடவடிக்கை முழுமையாக எடுக்கப்பட்டுவிட்டன என்றார்.
"வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர, ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி பாஸ் புக், ஹெல்த் இன்சூரன்ஸ் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட 12 ஆவணங்கள் எடுத்து சென்று வாக்களிக்கலாம். அது ஏற்றுக் கொள்ளப்படும். ஆகவே, வாக்காளர் அடையாள அட்டைதான் முக்கியம் என்பது இல்லை.

ஆனால், வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும். அது இல்லை எனில் வாக்களிக்க முடியாது. வாக்காளர் பெயர் உள்ளதா என அறிய வாக்காளர் உதவி ஆப் என்று ஒன்று உள்ளது. அதில், வாக்காளர் தனது எண்ணைப் பதிவு செய்தால், அது எந்த வாக்குச்சாவடி என்பதை உடனே காட்டி விடும். அதனால் அலைச்சல்களைத் தவிர்க்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications