தேர்தலில் பின்னடைவு.. கொங்கு மண்டலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி டோஸ்
சென்னை; இப்படி ஒரு செய்தி சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் பரவி வருகிறது. அது உண்மையா என்பது தெரியவில்லை. அந்த செய்தியின்படி, சட்டசபை தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவிற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாம். இதனால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணனை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செம டோஸ் விட்டதாக சொல்கிறார்கள்.
சட்டசபை தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சி வென்று ஆட்சியை பிடித்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் திமுகவிற்கே சாதகமாக இருப்பதாக கூறப்பட்டது.
இதனிடையே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஈரோடு மாவட்டத்தில் திமுகவிற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது. அங்கு அதிமுகவில் முக்கிய தலைவர்களாக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் இருந்தார்கள். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் 3 பேரும் வெற்றி பெற்றார்கள். அதில் கருப்பணனும், செங்கோட்டையனும் தற்போது அமைச்சர்களாக உள்ளனர்.
அமைச்சர்கள் மோதல்
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்ற செங்கோட்டையனும், கருப்பணனும் ஒன்று சேர்ந்து செயல்பட்டனர். தோப்பு வெங்கடாச்சலத்துக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. இதற்கிடையே அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் ஜெயலலிதா பேரவை மாநில நிர்வாகி பதவியை தோப்பு வெங்கடாச்சலம் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
பெருந்துறை தொகுதி
இதனிடையே சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாச்சலத்துக்கு இந்தமுறை சீட் வழங்கப்படவில்லை. சீட் கொடுக்காததால் திடீரென்று சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்து செங்கோட்டையனும், கருப்பணனும் பாதி நாட்கள் பெருந்துறை தொகுதிக்கு வந்து அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்காக பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி கோபம்
இதனிடையே சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் பெருந்துறையில் வெல்வது கடினம் என்றும் டெபாசிட் கிடைப்பது கேள்விக்குறிதான் என்றும் உளவுத்துறை முதல்வருக்கு அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிது.இதனால், சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோரை அழைத்துப் பேசினாராம்.
வெற்றி கடினம்
அப்போது உங்களால் தேவையில்லாமல் பெருந்துறை தொகுதியை இழந்து விட்டோம். உங்கள் பேச்சைக் கேட்டதால் ஒரு தொகுதியே போய் விட்டது. இந்த தொகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் மாவட்டம் முழுவதும் எதிரொலித்துள்ளது. இதனால், பலர் வெற்றிபெறுவது கடினமாகிவிட்டது. அதற்கு, நீங்கள் இருவரும்தான் காரணம் என்று டோஸ் விட்டதாக கிசுகிசுக்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.