சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் களைந்தவர்... இம்மானுவேல்... நினைவு கூர்வோம்... டிடிவி தினகரன் பதிவு!!
சென்னை: சமூக ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திய தீண்டாமையை ஒழிப்பதற்கு முனைப்புடன் பாடுபட்ட இம்மானுவேல் சேகரனாரின் 63 வது நினைவுநாளில் அவருக்கு இதய அஞ்சலிகளைச் செலுத்துகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்நாளில் நினைவு கூர்வோம் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் தமிழகத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 4000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் பரமக்குடி முழுவதும் ஆளில்லா விமானங்கள் மற்றும் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடந்து வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, மாவட்டக் கலெக்டர் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படும். மீறுபவர்கள் மீது 144 சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ''சமூக ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திய தீண்டாமையை ஒழிப்பதற்கு முனைப்புடன் பாடுபட்ட இம்மானுவேல் சேகரனாரின் 63 வது நினைவுநாளில் அவரை நினைவு கூர்வோம்'' என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications