"காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை.." பஹல்காம் தாக்குதலுக்கு ரஜினி கண்டனம்
சென்னை: காஷ்மீர் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாட்டை உலுக்குவதாக இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் அரங்கேறியது. அங்குள்ள புல்வெளியில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளைத் தீவிரவாதிகள் சுட்டுத் தள்ளினர். இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த்
இந்தத் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடந்து வந்த ஜெயிலர் 2 ஷூட்டிங்கை முடித்துக் கொண்ட அவர் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தார். மேலும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டோரையும் அதற்குப் பின்னணியில் இருந்தவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அவர் மேலும் கூறுகையில், "காஷ்மீரில் இயற்கை அழகும் அமைதியும் திரும்பியுள்ளது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்பதற்காக இதுபோல செய்கிறார்கள். நிச்சயம் இதைச் செய்தவர்களையும் அதற்குப் பின்னால் இருப்பவர்களையும் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். இந்தத் தீவிரவாதிகளுக்குக் கடுமையான தண்டனை தர வேண்டும்.
கடும் தண்டனை தரணும்
மீண்டும் இதுபோன்ற சம்பவங்களைச் செய்ய அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதை மத்திய அரசு நிச்சயம் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்வார்கள்" என்றார்.
காஷ்மீர் தாக்குதல்
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தாக்குதல் நடந்த அன்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு விரைந்தார். மறுநாளே தாக்குதல் நடந்த பஹல்காமிற்கு சென்று பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்தார். மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த நிலையில், அதிலும் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுத் தாக்குதல் குறித்து விளக்கமளித்தனர்.
இந்தியா பதிலடி
மேலும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இந்தியா அவர்கள் மீதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானியர்களின் விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் தனது விவசாயம், குடிநீர்த் தேவை என பலவற்றுக்கு சிந்து நதி நீரையே சார்ந்திருக்கும் சூழலில் அந்த ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications