அசோக்குமார் எங்கே? ஒரு நாளைக்கு 3 முறை செல்போனை மாற்றுகிறாரா? அமைச்சர் தம்பிக்கு உதவுவது யார்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அடிக்கடி தனது இருப்பிடத்தையும் செல்போன் எண்ணையும் மாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர்- சேலம் சாலையில் 300 கோடி ரூபாயில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பங்களா கட்டி வருகிறார். இந்த இடத்தில் நில மோசடி நடந்துள்ளதாகவும் வெளிநாட்டு கட்டுமான பொருட்கள் வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுவிட்டார்.
இந்த வழக்கில் அசோக்குமாரின் பெயரும் உள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை 4 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அசோக்குமார் ஆஜராகவில்லை. திடீரென தனக்கு இதய பிரச்சினை இருப்பதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்ற காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர் அமலாக்கத் துறையிடம் ஆஜராவதில் இருந்து 4 வாரங்களுக்கு காலஅவகாசம் கேட்டிருந்தார். ஆனால் அவர் தலைமறைவாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் எங்கே இருக்கிறார் என அமலாக்கத் துறையினர் தேடி வருகிறார்கள். அவர் அண்மையில் கேரளாவில் கைது செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என அமலாக்கத் துறை மறுத்தது.
இந்த நிலையில் அசோக்குமாரை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தாலும் அவர் கிட்டே நெருங்கும் நேரத்தில் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறார் என்றும் அதே போல் செல்போன் எண்களையும் மாற்றிக் கொண்டே வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு செல்போன் எண்ணின் டவரை வைத்து அங்கு சென்றால், அதற்குள் வேறு இடத்திற்கு மாறி செல்போன் எண்ணையும் மாற்றி விடுகிறார். அவருக்கு யார் அடைக்கலம் கொடுத்துள்ளார்கள். அவருக்கு யார் உதவி வருகிறார்கள், அவருடைய மனைவி, மாமியாருக்கு சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அசோக்குமாரிடம் கரூர் வீடு குறித்து விசாரிக்க வேண்டியது உள்ளது. ரூ 30 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ 10 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். இது குறித்து அமலாக்கத் துறை கஸ்டடியில் இருந்த செந்தில் பாலாஜியிடம் கேட்ட போது எல்லாமே தம்பிக்குத்தான் தெரியும் என சொல்லிவிட்டார். எனவே அசோக்குமாரிடம் விசாரணை நடத்தினால்தான் அமலாக்கத் துறையின் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications