18 மணி நேரம் டார்ச்சர்.. ESI டாக்டர்களை வரச்சொன்னதே இதற்குத்தான்.. மா.சுப்பிரமணியன் பகீர்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை மனிதாபிமானமற்ற முறையில் 18 மணி நேரம் உணவு கொடுக்காமல் டார்ச்சர் செய்துள்ளனர், கீழே தள்ளியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

செந்தில் பாலாஜி கைது: இதையடுத்து நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில்பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
மா.சுப்பிரமணியன் பேட்டி: இந்நிலையில் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "செந்தில் பாலாஜியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் 18 மணி நேரம் உணவு கொடுக்காமல், அமைச்சர் செந்தில் பாலாஜியை கீழே தள்ளி, டார்ச்சர் செய்துள்ளனர்.
அதிகாலையில் செந்தில் பாலாஜியை பார்த்தபோது துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவரை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அமலாக்கத்துறையினர் இருந்தனர். அறுவை சிகிச்சைக்கு முன்வராமல் கைது செய்வதற்காகவே அமலாக்கத்துறை செயல்பட்டது. மாற்றுக் கருத்தை பெறுவதற்காகவே இஎஸ்ஐ மருத்துவர்களை வரவைத்தனர்.
உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்: இஎஸ்ஐ மருத்துவர்களும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த சான்றிதழையே ஏற்றுக் கொண்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றால் செந்தில் பாலாஜி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி இன்றே அழைத்துச் செல்லப்படுவார்.
பாஜகவின் கிளை அமைப்பு போலவே அமலாக்கத்துறை செயல்படுகிறது. செந்தில் பாலாஜியை 18 மணி நேரத்துக்கும் மேல் அடைத்து வைத்து டார்ச்சர் செய்துள்ளனர். அமலாக்கத்துறையினர் தங்களின் எஜமானர்களான மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை திருப்திப்படுத்தியுள்ளனர்.
பாஜக திண்டாடுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்தவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. திமுக ஊழல் கட்சி என்ற போலி கருத்தை நிரூபிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. திமுக மீதும், திமுக தலைவர்கள் மீது எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் பாஜக திண்டாடுகிறது.
பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டு வருவதால் பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பாஜக பதற்றத்தில் உள்ளது.
எதிர்க்கட்சிகள் மீது களங்கம் ஏற்படுத்துவது மட்டுமே பாஜகவின் குறிக்கோள். டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்தது. இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்துள்ளனர்.
அடிபணியமாட்டோம்: மத்திய பாஜக ஆட்சியின் தோல்விகளை மறைக்க நடத்தும் நாடகம்தான் இந்த கைது நடவடிக்கை. தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போட்டு, அவர்களின் செயல்பாடுகளை முடக்க பாஜக நினைக்கிறது. மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு எதிர்க்கட்சிகள் அடிபணியாது; இன்னும் கூடுதல் வேகத்துடன் செயல்படுவோம்.
அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் 95% பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மத்திய அரசு, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பாரபட்சமாக அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது
அண்ணாமலைக்கு ஆத்திரம்: உள்ளாட்சித் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றதற்கு செந்தில் பாலாஜியே காரணம். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியது. 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தான் தோற்றதற்கு செந்தில் பாலாஜியே காரணம் என்று நினைத்து அவரை பழிவாங்கும் நோக்கில் அண்ணாமலை சுற்றித் திரிகிறார். அண்ணாமலையின் அரசியல் தில்லுமுல்லுகளை செந்தில் பாலாஜி விமர்சித்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்குமாறும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை உடனடியாக ஜாமினில் விடுவிக்கக் கோரியும் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications