கைதுக்கு நடுவே! செந்தில் பாலாஜியின் தம்பி அசோக், அவரது மனைவிக்கு பறந்த சம்மன்! அமலாக்கத்துறை அதிரடி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக அவரது சகோதரரான தம்பி அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செயல்பட்டவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக சிசிபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் உள்பட மேலும் சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு பணத்தை திரும்ப கொடுத்ததாக கூறி இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மற்றவர்களின் மீதான வழக்கை விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தனர். நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் இன்று முதல் 8 நாட்கள் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜியின் சகோதரரான தம்பி அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது. இருவரும் நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி அமலாக்கத்துறை தரப்பில் இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜியின் குடும்பம் அடுத்த சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
அதாவது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் பணி வாங்கி தருவதாக கூறி பணம்வசூலித்த வழக்கில் அவரது தம்பி அசோக்கிற்கும் தொடர்பு உள்ளதாக சிசிபி ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து இருந்தது. ஆனால் அவரது மனைவியின் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, கரூரில் உள்ள அசோக்கின் வீடு, அலுவலகம், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போதும் பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வருமான வரி சோதனையில் அசோக்கின் மனைவியின் பெயரும் அடிபட்டது. இதனால் தான் தற்போது அமலாக்கத்துறை 2 பேருக்கும் சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications