நெகிழ்ந்த டாக்டர் மோகன் காமேஸ்வரன்.. "காதில் தேன்வார்த்தார்.." இதுதான் கருணாநிதி.. உடனே வந்த ஓகே!
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையை இலவசமாக கொண்டு வந்தவர் கருணாநிதி என பிரபல காது மூக்கு தொண்டை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் பேசியது தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் கருணாநிதி மறைந்ததும் பிரபல மருத்துவர்கள் சார்பில் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய கருணாநிதியின் ENT மருத்துவர் யார் அறிந்திடாத புது தகவல் ஒன்றை கூறினார்.

அதாவது கருணாநிதியை தாம் ஒரு முறை சந்தித்த போது, உனக்கு என்னய்யா வேண்டும் என்றும் ஏன் என்னிடம் எதுவுமே கேட்பதில்லை எனவும் கருணாநிதி கேட்டதாகவும் அதற்கு நான் ஒன்று உங்களிடம் கேட்பேன், ஆனால் பயமாக இருக்கிறது எனக் கூறியதாகவும் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியிருக்கிறார்.
என்ன விஷயம் எதுவாக இருந்தாலும் சொல்லு என தன்னிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டதால், காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை வேண்டும் என தாம் கூறியதாக தெரிவித்தார். காக்ளியர் இம்ப்ளாண்ட் என்றால் என்ன என மீண்டும் கருணாநிதி கேட்டதால், தன்னிடமிருந்த லேப்டாப்பில் உள்ள ஒரு வீடியோவை அவருக்கு காண்பித்து அது குறித்து விளக்கியதாக தெரிவித்தார்.
பிறவியிலேயே ஊமையாக இருக்கும் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு காக்ளியர் இம்ப்ளான் சிகிச்சை செய்யப்பட்டதால் அந்தக் குழந்தையால் கேட்க முடிவதாகவும் மற்றொரு குழந்தை ஏழை குடும்பத்தை சேர்ந்தது என்பதால் அதற்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை செய்ய முடியவில்லை எனவும் தாம் விளக்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து எவ்வளவு செவவாகும் என கருணாநிதி கேட்டதாகவும் அப்போது ரூ.6 லட்சம் ஆகும் என தாம் கூறிய போது அவ்வளவு தானே என்று கூறிவிட்டு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும் பேசவும், செவிதிறனும் பெறும் வகையில் காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையை கட்டணமின்றி இந்தியாவில் முதல்முறையாக கருணாநிதி அறிமுகம் செய்தார் என்ற வரலாற்றை கூறினார்.
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நாளை தொடங்கும் நிலையில், டாக்டர் மோகன் காமேஸ்வரனின் இந்த வீடியோ பதிவு மீண்டும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications